லோக்பால்: நாடாளுமன்ற மாண்பு காக்கப்பட வேண்டும்- காங்., பாஜக, இடதுசாரிகள் கருத்து
டெல்லி: லோக்பால் மசோதா தொடர்பாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுத்து வந்தாலும், நாடாளுமன்றம்தான் மசோதாவை உருவாக்கி, நிறைவேற்ற வேண்டும் என்ற கருத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்துள்ளன. இது அன்னா ஹஸாரே குழுவினருக்கு சற்றே பின்னடைவாக கருதப்படுகிறது.
நாடாளுமன்றத்தின் மாட்சிமை காக்கப்பட வேண்டும். நாடாளுமன்றம்தான் சட்டங்களை இயற்ற வேண்டும் என்று காங்கிரஸுக்கு ஆதரவாக பாஜக மற்றும் இடதுசாரி கட்சிகள் நேற்று பிரதமர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தின்போது தெரிவித்தன.
லோக்பால் மசோதா விவகாரம் தொடர்பாக நேற்று பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இதில் அன்னா முதலில் தனது உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேசமயம், லோக்பால் மசோதா தொடர்பாக எந்த கருத்தொற்றுமையும் ஏற்படவில்லை.
இக்கூட்டத்தில் பேசிய பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பிரதிநிதிகள் பேசுகையில், தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள லோக்பால் மசோதாவை அரசு திரும்பப் பெற வேண்டும். அன்னா குழுவினர் பரிந்துரைத்துள்ள ஜன் லோக்பால் மசோதாவை பரிசீலனை செய்து வலுவான லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும்.
அதேசமயம், சட்டம் இயற்றும் முழு அதிகாரமும் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. அதன் மாண்பு கெடும் வகையில் யாரும் செயல்படக் கூடாது. நாடாளுமன்றத்தின் மாட்சிமை காக்கப்பட வேண்டும் என்றும் இக்கட்சிகள் வலியுறுத்திக் கூறியுள்ளன.
ஜன் லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அதே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியே இது நிறைவேற்றப்படக் கூடாது என்ற தொனியில் பாஜக மற்றும் இடதுசாரிகள் கூறியுள்ளது காங்கிரஸ் அரசுக்கு தற்போதைக்கு ஆறுதலான விஷயம்.












Click it and Unblock the Notifications