பேரறிவாளன், முருகன், சாந்தன் செப்டம்பர் 9ம் தேதி தூக்கிலிடப்படுவர்- வேலூர் சிறை அதிகாரிகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோர் கருணை மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை குடியரசுத் தலைவர் சமீபத்தில் நிராகரித்து உத்தரவிட்டார்.
இதனால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். மூவரையும் தூக்கிலிடக் கூடாது என்று கோரி பல்வேறு நாடுகளிலும், தமிழகத்திலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஒரு இயக்கம் போல இதை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இவர்கள் மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ள தகவலை முறைப்படி உள்துறை அமைச்சகம், வேலூர் சிறைக்கு அனுப்பி வைத்தது.
இதனால் மூவரையும் தூக்கிலிடுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கின. விதிமுறைப்படி, தூக்குத் தண்டனையை நிறைவேற்றலாம் என்ற உத்தரவு வந்த 7 நாட்களுக்குள் தண்டனைக்குரியவரை தூக்கிலிட வேண்டும். மூன்று தமிழர் விவகாரத்தில், நேற்று கடிதம் வந்ததாக கூறப்படுகிறது. எனவே இன்றிலிருந்து ஏழு நாட்களுக்குள் அதாவது செப்டம்பர் 2ம் தேதிக்குள் அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் செப்டம்பர் 9ம் தேதி மூன்று பேரும் தூக்கிலிடப்படவுள்ளதாக வேலூர் சிறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முதல் கட்டமாக பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரிடமும் கருணை மனு நிராகரிக்கப்பட்ட தகவலை முறைப்படி சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பின்னர் இன்று அவர்களை தூக்கிலிடும் தேதியை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 21 ஆண்டுகளாக சிறையில் வாடி வரும் மூவரையும் தூக்கிலிட நாள் குறித்துள்ளது தமிழ் உணர்வாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுளள்ள மூவரில் பேரறிவாளன் தமிழகத்தைச் சேர்ந்தவர். மற்ற இருவரும் ஈழத்தைச் சேர்ந்தவர்கள்.
சிறைக்குப் பலத்த பாதுகாப்பு:
மூன்று தமிழர்கள் தூக்கிலிடப்படவுள்ளதைத் தொடர்ந்து வேலூர் சிறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிறைக்கு வெளியே கமாண்டோப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சிறைக்குள்ளும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மூன்று பேரையும் தூக்கிலிட நாள் குறிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications