தூக்குக் கயிற்றிலிருந்து பாலனை காமராஜர் காத்தது போல ராஜீவ் கொலையாளிகளை ஜெ. காப்பாரா?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இறுதியாக நளினி, அவரது கணவர் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. சோனியா காந்தியின் தலையீட்டின் பேரில் இது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்து தங்களுக்குக் கருணை காட்ட வேண்டும் என்று கோரி மற்ற மூவரும் குடியரசுத் தலைவருக்கு மனு செய்தனர். இந்த மனுக்களை கடந்த காலங்களில் குடியரசுத் தலைவர்களாக இருந்த கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம் ஆகியோர் உள்துறை அமைச்சக பரிந்துரைக்கு அனுப்பினர். அப்போது தூக்குத் தண்டனையை நிறைவேற்றலாம் என்று கூறி உள்துறை அமைச்சகம் அளித்த பரிந்துரையை இரு குடியரசுத் தலைவர்களும் ஏற்கவில்லை. இதனால் மூவரும் தப்பும் வாய்ப்பு பிரகாசமானது.
இந்த நிலையில் தற்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், இந்த மூவரின் கருணை மனுவையும் சமீபத்தில் நிராகரித்து உத்தரவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றம் மீதான தாக்குதல் வழக்கில், அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட அடுத்த சிலநாட்களில் இந்த மூவரின் கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டது.
தற்போது இந்த மூவரையும் காக்க பல்வேறு அறப்போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேலும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தயவை தற்போது அனைவரும் நாடி நிற்கின்றனர். ஜெயலலிதா நினைத்தால் மூவரையும் காப்பாற்ற முடியும் என்று அனைவரும் கோரி வருகின்றனர். இதுகுறித்து இதுவரை ஜெயலலிதா தரப்பிலிருந்து எந்த கருத்தும் வெளியிட்பபடவில்லை.
இதற்கு முன்பு 1957ம் ஆண்டு காமராஜர் முதல்வராக இருந்தபோது, கொலை வழக்கில் பாலன் என்பவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க விடுத்த கோரிக்கையை பரிசீலித்த முதல்வர் காமராஜர், தலையிட்டு தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற உதவி பாலன் உயிரைக் காப்பாற்றினார்.
அதேபோல தற்போது ஜெயலலிதாவும் நினைத்தால் இந்த மூன்று பேரின் உயிரைக் காப்பாற்றலாம் என்று தமிழ் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications