கேஜ்ரிலாலுக்கு ஐடி நோட்டீஸ்: எங்களோடு விளையாடாதீங்க! - ஹஸாரே பாய்ச்சல்
ராலேகான் சித்தி: எனது குழுவைச் சேர்ந்த அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது வருமான வரித்துறை. இது எங்களை அவமானப்படுத்துவதாகும். எங்களுடன் விளையாடாதீர்கள். இந்த விளையாட்டில் ஈடுபட வேண்டாம் என்று மத்திய அரசை நான் கடுமையாக எச்சரிக்கிறேன், என அன்னா ஹஸாரே கூறியுள்ளார்.
அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்தவர் அரவிந்த் கேஜ்ரிவால். இவர் மத்திய அரசு பணியில் இந்திய வருவாய் பணி அதிகாரியாக இருந்தார். 2006-ம் ஆண்டு அப்பணியை ராஜினாமா செய்து விட்டு அன்னா ஹஸாரே குழுவில் இணைந்து பணியாற்றிவருகிறார்.
அவர் பணி ஒப்பந்த விதிமுறைகளை மீறி விட்டதாகவும் மத்திய அரசுக்கு ரூ.9 லட்சம் பாக்கி வைத்துள்ளதாகவும் அதை திருப்பி செலுத்தினால்தான் ராஜினாமாவை ஏற்க முடியும் என்றும் கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு அன்னா ஹசாரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது சொந்த ஊரான ராலேகான் சித்தி கிராமத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
அரவிந்த் கெஜ்ரிவால் சிறந்த தேச பக்தர். கடந்த 8 மாதங்களாக அவரை எனக்குத் தெரியும். அவர் மிகவும் நேர்மையானவர். வருமான வரித்துறை அவர் ரூ.9 லட்சம் பாக்கி வைத்து இருப்பதாக கூறி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
4 ஆண்டுகள் கழித்து இந்த பிரச்சினையை கிளப்ப காரணம் என்ன? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அவர் இந்த நாட்டுக்காக உழைக்கிறார். இதனால் தனது சொத்துக்களை இழந்துள்ளார். அப்படிப்பட்டவர் மீது புகார் கூறுவது சரியல்ல.
மத்திய அரசு மோசமான விளையாட்டு விளையாடுகிறது. இந்த விளையாட்டில் ஈடுபட வேண்டாம் என்று மத்திய அரசை நான் கடுமையாக எச்சரிக்கிறேன்.
மத்திய அரசின் பழி வாங்கும் நடவடிக்கை தொடர்ந்தால் அதை எங்களது மக்கள் பொது நல அமைப்பு வேறு வழியில் சந்திக்கும். இதற்காக போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்," என்றார்.












Click it and Unblock the Notifications