பிளக்ஸ் போர்டு வைப்பதில் 2 பிரிவினர் இடையே மோதல்- உத்தப்புரத்தில் பதட்டம்
உத்தப்புரம்: உத்தப்புரத்தில் பிளக்ஸ் போர்டு வைப்பதில் 2 பிரிவினர் இடையே கடும்மோதல் ஏற்பட்டதால் அங்கு பதட்டம் நிலவுகின்றது. பதட்டத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம், உத்தப்புரத்தில் நீண்ட காலமாக தீண்டாமைப் பிரச்சினை நிலவி வருகிறது. அங்கு அமைக்கப்பட்டிருந்த தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டநாள் முதல் இரு பிரிவினருக்கும் இடையே நீரு பூத்த நெருப்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்த ஊரில் 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது. மேலும், பொதுமக்கள் நலன் கருதி நிரந்தர புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில், சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சி. பிறந்த நாளை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 5ம் தேதி ஒரு தரப்பினர் பிளக்ஸ் போர்டு வைத்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அதேபோல, செப்டம்பர் 14ம் தேதி தியாகி இமானுவேல்சேகரன் குருபூஜை சம்பந்தமான பிளக்ஸ் போர்டு தெற்குத்தெரு நுழைவாயில் முன் வைக்கப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதில் 2 தரப்பினரும் கல்வீசி தாக்கிக் கொண்டதில், அய்யம்பிள்ளை (60), மணி (30), கணேசன்(30) ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த எஸ்.பி. ஆஸ்ராகர்க் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தார். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க டி.எஸ்.பி. குமார் தலைமையிலான பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications