புதுச்சேரியில் புதிய அமைச்சர் பதவியேற்பு-3 என்.ஆர்.காங். எம்.எல்.ஏக்கள், திமுக, அதிமுக புறக்கணிப்பு
புதுச்சேரி : புதுச்சேரியில் 6வது அமைச்சராக தியாகராஜன் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்குத் துணை நிலை ஆளுநர் இக்பால் சிங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அமைச்சர் பதவி கேட்டு கிடைக்காத கோபத்தில் ஆளும் என். ஆர். காங்கிரஸைச் சேர்ந்த சிவா, கார்த்திகேசன், அசோக் ஆனந்த் ஆகியோர் இன்றைய பதவியேற்பு விழாவுக்கு வராமல் புறக்கணித்தனர். அதேபோல திமுக, அதிமுக உறுப்பினர்களும் புறக்கணித்தனர்.
புதுவை முதல்வர் ரங்கசாமி, எந்த அளவுக்கு மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றாரோ அதை விட பல மடங்கு எதிர்ப்பை தற்போது முன்னாள் தோழமைக் கட்சியான அதிமுக மற்றும் எதிர்க்கட்சிகளிடமிருந்து சந்தித்து வருகிறார்.
அதேபோல அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் பலரும் கூட ரங்கசாமி மீது அதிருப்தியுடன் உள்ளனர். எல்லாவற்றுக்கும் காரணம் அமைச்சர் பதவி கிடைக்காததால். இதனால் கிட்டத்தட்ட தனிமைப்படுத்தப்பட்ட முதல்வராக மாறியுள்ளார் ரங்கசாமி.
ஏற்கனவே அவரது அமைச்சரவையில் 5 அமைச்சர்கள் உள்ளனர். இந்த நிலையில் 6வது அமைச்சராக தியாகராஜன் நியமிக்கப்பட்டார். அவர் இன்று பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநர் இக்பால் சிங், தியாகராஜனுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேசமயம், அமைச்சர் பதவி கேட்டு கிடைக்காத அதிருப்தியில் இருந்து வரும் என். ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் கார்த்திகேசன், அசோக் ஆனந்த் மற்றும் சிவா ஆகியோர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வரவில்லை. மேலும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களும் வரவில்லை.












Click it and Unblock the Notifications