2 கால்சென்டர் பெண் ஊழியர்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த எஸ்.ஐ.க்கு காப்பு
சென்னை: சாலையில் நின்ற 2 கால்சென்டர் பெண் ஊழியர்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த, எஸ்.ஐ., ஊர்காவல் படை காவலருடன் சேர்ந்து கைது செய்யப்பட்டார்.
சென்னை, பெரம்பூர் பக்சன் தெருவை சேர்ந்தவர் ஜனனி(23), நிக்கோலா(24) கால் சென்டர் பணியாளர்கள். இருவரும் கடந்த 5ம் தேதி, அதிகாலையில் பணிமுடிந்து வரும் வழியில், பெரம்பூர் மேம்பாலம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர்.
அப்போது அங்கு வந்த போலீஸ்காரர் மற்றும் மற்றொருவர், இவரிடம் விசாரித்தனர். அதன்பின் இருவர் மீதும் சந்தேகம் உள்ளதாக கூறி, அவர்களின் வீடுகளிலும் சோதனையிட்டனர்.
எதுவும் கிடைக்காத நிலையில், தேவைப்படும் போதெல்லாம், விசாரனைக்கு போலீஸ் நிலையத்திற்கு வர வேண்டும் என கூறி சென்றுள்ளனர். வீட்டில் சோதனை நடத்தும் போது, இருவரையும், இருஅர்த்த மொழியில் திட்டியதாகவும், செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஜனனி, நிக்கோலா ஆகிய இருவரும், கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், குற்றசாட்டப்பட்டவர் ஐ.சி.எப் போலீஸ் நிலைய எஸ்.ஐ., அய்யப்பன் என்பதும், அவருடன் வந்தவர் ஊர் காவல் படையில் பணியாற்றும் பாபு என்பதும் தெரிந்தது.
இருவரிடம் போலீசார் உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அய்யப்பன், பாபு ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட அய்யப்பனுக்கு, சில மாதங்களுக்கு முன் திருமணமாகி அவரது மனைவி கர்ப்பமாக உள்ளனர். பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படும் முதல் போலீஸ் அதிகாரி அய்யப்பன்.












Click it and Unblock the Notifications