கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்திற்கு விஜயகாந்த் ஆதரவு

Subscribe to Oneindia Tamil

இடிந்தகரை: கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து கடந்த ஒரு வாரமாக கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரையில் நடந்து வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். இன்று இடிந்தகரை சென்ற அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்துப் பேசினார்.

கடந்த 8 நாட்களாக கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக் கோரி நடந்து வரும் உண்ணாவிரதப் போராட்டம் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது. தற்போது பக்கத்து மாவட்டமான கன்னியாகுமரிக்கும் இது பரவியுள்ளது. மேலும் பல மாவட்டங்களிலும் போராட்டத்தைத் தீவிரப்படுத்த திட்டமிட்டு வருகின்றனர்.

மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து இப்போராட்டத்துக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டம் வலுத்துவருவதால் கூடங்குளம் பக்கம் மற்றவர்களின் கவனம் திரும்பிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இன்று காலை தேமுதிக தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் இடிந்தகரைக்கு வந்தார். உண்ணாவிரதம் இருந்து வரும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது அவர்களிடம் தனது ஆதரவை தெரிவித்த விஜயகாந்த், எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றும்போது, மக்களின் கருத்தை கேட்டுத் தான் செய்ய வேண்டும். மக்கள் எதை விரும்புகிறார்களோ, அதைத் தான் அரசும் செய்ய வேண்டும். மக்களுக்கும் நாட்டுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், அரசு செயல்பட வேண்டும் என்று கூறினார். மேலும் உங்களின் போராட்டத்துக்கு தேமுதிக முழு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார். பின்னர் அவரிடம் போராட்டக் குழுவினர் கோரிக்கை மனுவைக் கொடுத்தனர். அதைப் பெற்றுக் கொண்டு கிளம்பிச் சென்றார் விஜயகாந்த்.

முதல்வருக்கு மக்கள் இயக்கம் மனு

இதற்கிடையே, கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது,

கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி 7வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. 5வது நாளன்று நடந்த பேச்சுவார்த்தையில் மக்களின் கோரிக்கைகளை அரசு நிராகரித்துவிட்டதால் உண்ணாவிரதம் தொடர்கிறது.

அணுசக்தி வளாக இயக்குனர், முதல்வர், அமைச்சர் ஆகியோரின் அறிக்கை மற்றும் கருத்துகள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்கள் மனதை வேதனைப்படுத்தியுள்ளது. இது சிலர் நடத்தும் போராட்டம் அல்ல. பல தரப்பினரும் தாமாக வந்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

மேலும் இது மீனவர்கள் மட்டும் நடத்தும் போராட்டமும் அன்று. இதில் மாணவர்கள், மனித உரிமை அமைப்புகள், மகளிர் அமைப்புகள், விவசாய அமைப்புகள், தொழிற்சங்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மக்களின் ஒட்டுமொத்த உயிர் மற்றும் வாழ்வாதார பிரச்சனை என போராடி வருகின்றனர்.

மேலும் இந்த போராட்டத்தை முன்னாள் ஆளும் கட்சி துண்டிவிடுவதைப் போல் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியிருப்பது முற்றிலும் தவறானதாகும். இந்த போராட்டத்தின் பின்னணியில் எந்த சக்தியும் இல்லை. மக்கள் சக்தி மட்டுமே இந்த போராட்டத்தை நடத்தி வருகிறது. இந்த அணு உலையை சுற்றி நான்கு அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளதால் அச்சமடையத் தேவையில்லை என முதல்வர் தெரிவித்துள்ளார். ஆனால் 5 அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது என காசிநாத் பாலாஜி தெரிவித்துள்ளார். எனவே, எதை நம்புவது என்று தெரியவில்லை.

ஆழிப்பேரலை மற்றும் இயற்கைச் சீற்றங்களில் இருந்து காப்பாற்ற 7.5 மீ உயரத்தில் ஆலை கட்டப்பட்டிருப்பதாக முதல்வரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குமரியிலுள்ள 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையை கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி தாக்கியபோது, 7.5 மீ உயரம் என்பது இயற்கை பேரிடர்களில் இருந்து எப்படி அணு உலைகளை காப்பாற்ற முடியும்.

எனவே, ஆபத்தான இந்த உலையை திறக்காமல் இவற்றை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இயற்கைக்கு எதிரான திட்டங்களை தமிழகத்தில் ஒருபோதும் அனுமதிக்காதீர்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+