வங்கி ஊழியர் குழந்தை கடத்தலில் மர்மம் நீட்டிப்பு: போஸ்டர்கள் ஒட்டி தேடல்
சென்னை: சென்னை, விருகம்பாக்கத்தில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த வங்கி ஊழியரின் 2 வயது மகள் மாயமானதில் மர்மம் நீடித்து வருகிறது.
விருகம்பாக்கம், மஜீத் நகர் வி.வி.கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிகிறார். அவரது மனைவி வசந்தி. அவர்களுக்கு கவிதா என்கிற 2 வயது மகள் இருக்கிறாள்.
நேற்று முன்தினம் காலை கணேசன் வங்கிக்கு சென்றுவிட்டார். வீட்டில் வசந்தியும், கவிதாவும் மட்டும் இருந்துள்ளனர். மாலை நேரத்தில் கவிதா வீட்டு வாசல் முன்பு விளையாடிக் கொண்டிருக்க வசந்தி சமையல் செய்து கொண்டிருந்தார்.
சமையலை முடித்துவிட்டு வந்து பார்த்த போது குழந்தை கவிதாவை காணவில்லை. உடனே பதறிப்போன வசந்தி அக்கம்பக்கத்தில் எல்லாம் தேடினார். ஆனால் பலனில்லை.
இது குறித்து கணேசன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். குழந்தை மாயமானதில் இருந்த அதே பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவரையும் காணவில்லை. அதனால் அவர் தான் குழந்தையைக் கடத்தியிருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகித்தனர். அவரைத் தேடிக் கண்டுபிடித்து விசாரித்ததில் கடன் தொல்லை தாங்க முடியாமல் வீட்டை விட்டு ஓடிவிட்டதாகத் தெரிவித்தார். இதனால் குழந்தை மாயமானதில் மர்மம் நீடிக்கிறது.
தென் சென்னை துணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன், தி.நகர் துணை கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் வடபழனி உதவி கமிஷனர் சீனிவாசன், விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சச்சிதானந்தம் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் குழந்தையைத் தேடி வருகின்றனர்.
குழந்தை புகைப்படத்துடன் கூடிய 300 போஸ்டர்கள் அடித்து அதை வடபழனி, விருகம்பாக்கம் பகுதிகளில் ஒட்டியுள்ளனர். இது குறித்து இதுவரை 100 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும் எந்த தகவலும் இல்லை.
குழந்தை நகை அணிந்திருந்ததால் யாராவது நகைக்கு ஆசைப்பட்டு கடத்தியுள்ளனரா, அப்படி நகைக்காக கடத்துபவர்கள் நகையை எடுத்துக் கொண்டு குழந்தையை எங்காவது தவிக்க விட்டிருப்பார்களே. ஒரு வேளை குழந்தை எங்காவது தவித்துக் கொண்டிருக்கிறதா? அலல்து குழந்தை இல்லாதவர்கள் யாராவது கடத்தியிருக்கிறார்களா? என்பது போன்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.











Click it and Unblock the Notifications