தமிழக அரசியலில் ஒவ்வொரு குதிரையும் தனித்தனியாக ஓடுகின்றன: வைகோ

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரின் மரண தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி, மரண தண்டனை எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் அருகே 22ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
4வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் வைகோவும் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அவர் பேசியதாவது:
அற வழியிலான இந்த உண்ணாவிரதப் போராட்டம் எந்த நோக்கத்துக்காக நடத்தப்படுகிறது என்று இதற்கு முன்பு பேசியவர்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் மூலம் சரியாக உணர்த்தி விட்டனர்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதிமுக பங்கேற்கவில்லை என்று அறிவித்ததை தமிழகம் ஏற்றுக் கொண்டது. இப்போது தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒவ்வொரு குதிரையும் தனித்தனியாக ஓடுகின்றன.
ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் எனக்கும் கட்சிப் பணிகள் அதிகம் உள்ளது. இதேப் போல் சட்டமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் ஓட்டுவேட்டை நடத்திக் கொண்டு இருந்தபோது ஸ்டெர்லைட் ஆலை ஆய்வுக் குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருந்தேன். இப்போது, 3 தமிழர்களுக்காக இங்கு போராட்டத்தில் பங்கேற்றுள்ளேன்.
இந்த அறப்போராட்டத்தின் நோக்கம் கண்டிப்பாக வெற்றி பெரும். பல போராட்டங்களுக்கு மத்தியில் தமிழகம் உள்ளாட்சி மன்றத் தேர்தலை சந்திக்கிறது.
மரண தண்டனைக்கு எதிராக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அனலை அணையாமல் காக்க ஏராளமானவர்கள் அணிவகுத்து வருகிறார்கள்.
போராட்டத்தில் வலியுறுத்தப்படும் கோரிக்கைகள் நிறைவேறும்போதுதான் போராட்டம் வெற்றி பெற்றதாக குறிப்பிட முடியும். அந்த வகையில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெறும் அறப்போராட்டங்கள் கண்டிப்பாக வெற்றி பெறும் என்றார்.












Click it and Unblock the Notifications