தெலுங்கானா விவகாரம்... இன்று ஹைதராபாத் பந்த் - சோனியாவைச் சந்திக்கும் சந்திரசேகரராவ்!

மேலும், அவர் இது தொடர்பாக தங்கள் போராட்டக்குழுவின் செய்திகளை நாடாளுமன்ற பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜையும் சந்தித்துப் பேசவுள்ளார். சந்திரசேகரராவுடன் 25 பேர் கொண்ட பெரும் பட்டாளமே டெல்லியில் முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வரும் 4-ம் தேதி வரை டெல்லியில் இவர்கள் தங்கியிருந்து, பிரதமர் மற்றும் பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசுவார்கள் எனத் தெரிகிறது.
முன்னதாக, மாநிலத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆந்திர மாநிலத்துக்கான காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் நேற்று சோனியாவை சந்தித்து அறிக்கையினை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
19 வது நாளாக தொடரும் போராட்டம்
இதற்கிடையே தனி தெலுங்கானா மாநிலம் கோரி ஆந்திராவில் போராட்டக்குழுவினரின் வேலை நிறுத்தம் 19வது நாளாகத் தொடர்கிறது.
தெலுங்கானா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் இந்த போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது.
அரசு ஊழியர்கள், பஸ் ஊழியர்கள், வக்கீல்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் யாரும் வேலைக்கு செல்லவில்லை. பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் ஹைதராபாத் உள்பட 10 மாவட்டங்களிலும் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று 13-வது நாளாக பஸ்கள் ஓடவில்லை. தனி தெலுங்கானா கோரி ஹைதராபாத்தில் நேற்று பந்த் போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக அங்கு கடைகள் அடைக்கப்பட்டன. பஸ், ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனமும் ஓடவில்லை. ரெயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் நகரம் முழுவதும் வெறிச் சோடி கிடந்தன.
இன்று ஹைதராபாதில் பந்த்
போராட்டத்தின் இன்னொரு கட்டமாக, ஹைதராபாத் நகரில் இன்று முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது தெலுங்கானா கூட்டுப் போராட்டக் குழு. நகரின் பெரும்பான்மை பகுதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
ஆனால் ஹைதராபாத் ஐடி பூங்கா பகுதியில் மட்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அலுவலகங்கள் செயல்பட்டன. காங்கிரஸ் ஆதிக்கம் உள்ள இடங்களில் பந்துக்கு ஆதரவு குறைவாகவும், பாஜக - டிஆர்எஸ் கட்சி ஆதிக்கம் உள்ள இடங்களில் முழுமையான பாதிப்பும் உள்ளன.
அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க நகரம் முழுவதும் அதிரடிபடை போலீசார் குவிக்கபட்டு இருந்தனர்.
இருந்தபோதிலும் அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஏ.ஜி. திவாகர்ரெட்டிக்கு சொந்தமான பஸ் வனஸ்தாபுரத்தில் வந்தபோது மர்ம கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்டது.
பல ஆயிரம் கோடி இழப்பு
தெலுங்கானா போராட்டத்தில் ஆந்திர அரசு நிலை குலைந்துபோய் இருக்கிறது. அரசுக்கு நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. முதல்வர் கிரண்குமார் ரெட்டி கூட 1 வாரமாக தலைமைச் செயலகத்துக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டது.
நேற்றுதான் அவர் சட்ட சபைக்கு வந்தார். 10 மாவட்டங்களில் பஸ்கள் ஓடாத நிலையில் ஹைதராபாத் நகரில் மட்டும் பஸ்களை இயக்க ஆந்திர அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்காக தற்காலிக பஸ் டிரைவர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு தினக்கூலியாக ரூ.500 வழங்கப்படுகிறது. இவர்களை கொண்டும் அதிரடிப்படை போலீசார் பாதுகாப்புடனும் கூட்டம் கூட்டமாக பஸ்களை இயக்குகின்றனர்.
செய்தித்தாள் கூட கிடைக்கவில்லை
செய்தித்தாள் விற்போர் கூட தெலுங்கானா போராட்டத்தில் குதித்துவிட்டதால், நேற்றும் இன்றும் ஹைதராபாத் நகரில் செய்தித் தாள்களே கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
தெலுங்கு தவிர, ஆங்கிலம், இந்தி, உருது, தமிழ் என எந்த மொழி நாளிதழும் ஆந்திர தலைநகரில் கிடைக்கவில்லை.
தனி தெலுங்கானா பிரச்சினையில் மத்திய அரசு முடிவு எடுக்கும் வரை போராட்டத்தை நீட்டிக்க போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதில் ஆந்திராவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்து அறிந்த பிறகே மத்திய அரசு முடிவு எடுக்கும் என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.












Click it and Unblock the Notifications