ரூ. 300 கோடி வக்பு சொத்துக்களுக்குக் காப்பாளரானார் மன்சூர் அலிகான் பட்டோடி மகள்

போபால் மற்றும் பல்வேறு நாடுகளில் இந்த சொத்துக்கள் உள்ளன. இந்த வக்பு சொத்துக்களின் காப்பாளர் பொறுப்பை முறைப்படி சபா ஏற்றுக் கொண்டுள்ளார். போபாலில் உள்ள ஜம்மா மசூதி இந்த சொத்துக்களில் ஒன்றாகும். சவூதியிலும் இந்த அமைப்புக்குச் சொத்துக்கள் உள்ளன.
கடந்த 2008ம் ஆண்டு இந்த அமைப்பின் துணைக் காப்பாளராக தனது மகளை நியமித்தார் மன்சூர் அலிகான் பட்டோடி. தற்போது பட்டோடியின் மறைவுக்குப் பின்னர் சபா காப்பாளராகியுள்ளார்.
இந்த வக்பு சொத்துக்களை பரம்பரை பரம்பரையாக பட்டோடி குடும்பம்தான் நிர்வகித்து வருகிறது. பட்டோடிக்கு மொத்தம் மூன்று குழந்தைகள். அவர்களில் சைப் அலிகானும், மகள் சோஹா அலிகானும் சினிமாவில் நடித்து வருகின்றனர். இதனாலும், மத முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்கள் என்பதாலும், சினிமாவுடன் சம்பந்தப்படாத தனது மகள் சபாவை சொத்துக்களை நிர்வகிக்கும் பணியில் அமர்த்தினார் பட்டோடி.
அவாக்ப் இ ஷஹி அமைப்பின் முதல் பெண் காப்பாளராக இதன் மூலம் உருவெடுத்துள்ளார் சபா. மேலும் இளம் வயதில் இந்தப் பொறுப்புக்கு அவர் வந்துள்ளார்.
சபாவின் நியமனம் தொடர்பாக தங்களுக்குக் கடிதம் வந்திருப்பதாகவும், அதை மாநில வக்பு வாரிய உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், வக்பு வாரியத் தலைவர் குப்ரான் அசம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவாக்ப் இ ஷஹி அமைப்புக்கு மெக்கா மற்றும் மெதீனா புனித நகரங்களில் விடுதிகள் உள்ளன. அங்கு தங்குவோருக்கான அனுமதிக் கடிதத்தை கொடுக்கும் உரிமை தற்போது சபாவுக்கு வந்துள்ளது. இந்த இரு நகரங்களிலும் உள்ள விடுதிகளில் மொத்தம் 300 பேர் தங்கலாம். இங்கு இலவசமாக தங்கும் வசதி அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த சொத்துக்களை சவூதியில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் அவாக்ப் இ ஷஹி நிர்வகித்து வருகிறது.












Click it and Unblock the Notifications