திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது
திருச்சி : திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. பிரசாரம் முடிந்ததும், திருச்சி மேற்குத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் அக்டோபர் 13ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் படு சூடாக நடந்து வந்தது. ஆளும் கட்சி வேட்பாளர் மு.பரஞ்சோதிக்குக் கிலியேற்படுத்தும் வகையில், திமுக வேட்பாளர் கே.என்.நேருவுக்கு ஆதரவாக திமுகவினர் பம்பரம் போல சுழன்று பணியாற்றி வந்தனர்.
10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் திருச்சியில் முகாமிட்டு பிரசாரப் பணிகளை கவனித்தனர். அதற்கு சற்றும் சளைக்காமல் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் முகாமிட்டு நேரடியாக பிரசாரத்தைக் கவனித்தார். தானே போட்டியிடுவதாக கருதி தீவிரப் பணியாற்றுமாறு அவர் திமுகவினரை தட்டிக் கொடுத்து வேலை வாங்கி வந்தார். இதனால் பிரசாரக் களத்தில் அனல் பறந்தது.
அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதாவும், திமுக வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதியும் பிரசாரம் செய்துள்ளனர். தேமுதிக, பாமக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் இந்த களேபரத்தில் பங்கேற்காமல் ஓரமாக இருந்து வேடிக்கை பார்க்கின்றன.
இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. மேலும், திருச்சி மேற்குத் தொகுதியில் வாக்குப் பதிவு நடந்து முடியும் வரை அங்கு உள்ளாட்சித் தேர்தல் பிரசாரமும் செய்யக் கூடாது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.
மீறி வாக்கு சேகரிக்கும் முயற்சிகளில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. இதனால் திருச்சி மேற்குத் தொகுதியில் பிரசாரம் முற்றிலும் ஓய்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications