தீர்ப்பு குறித்து விளக்குமாறு காவிரி நடுவர் மன்றத்துக்கு உத்தரவிட முடியாது-சுப்ரீம் கோர்ட்

பல வருட கால இழுத்தடிப்புக்குப் பின்னர் கடந்த 2007ம் ஆண்டு காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கில் நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பு புரியாததாக உள்ளதாக கூறி 2008ம் ஆண்டு விளக்கம் கேட்டு மனு செய்தது தமிழக அரசு. இந்த நிலையில் தீர்ப்பில் திருப்தி இல்லை என்று கூறி வழக்கில் சம்பந்தப்பட்ட தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுவை ஆகிய நான்கு மாநில அரசுகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இதன் காரணமாக வழக்கு நிலுவையில் இருப்பதால் தமிழக அரசுக்கு விளக்கம் தர முடியாது என நடுவர் மன்றம் கூறி விட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தமிழக அரசு. அதில், தாங்கள் கோரிய விளக்கத்தை அளிக்குமாறு நடுவர் மன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தது.
இதை இன்று விசாரித்த டி.கே.ஜெயின் தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச், தீர்ப்பு குறித்து விளக்கம் அளிக்குமாறு நடுவர் மன்றத்துக்கு உத்தரவிட முடியாது. விளக்கம் அளிப்பது குறித்து நடுவர்மன்றம்தான் முடிவெடுக்க முடியும் என்று கூறி விட்டனர்.
இந்த நிலையில் நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து நான்கு மாநில அரசுகளும் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது பிப்ரவரி 7ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.












Click it and Unblock the Notifications