எகானமி க்ளாஸில் வருவேன் எனத் தெரிந்தே பிஸினஸ் க்ளாஸ் டிக்கெட் கொடுக்கிறார்கள் - கிரண் பேடி பலே பதில்
டெல்லி: நான் சிக்கன வகுப்பில்தான் பயணிக்கிறேன் என்று தெரிந்துதான் எனக்கு பிஸினஸ் கிளாஸ் டிக்கெட் எடுத்துத் தருகிறார்கள் என்னை அழைப்பவர்கள், என்று பதிலளித்துள்ளார் கிரண்பேடி.
ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான கிரண் பேடி, தன்னை விழாக்களுக்கு அழைக்கும் தன்னார்வ அல்லது தனியார் அமைப்புகளிடம் உயர்வகுப்புக்கான டிக்கெட்டை பெற்றுக் கொள்கிறார். ஆனால் சிக்கன வகுப்பில் பயணம் செய்கிறார். மேலும் இந்த சிக்கன வகுப்பில் பயணிக்க அரசு தரும் 75 சதவீத சலுகையையும் அனுபவிக்கிறார்.
இதன் மூலம் பல லட்ச ரூபாயைப் பெற்றுள்ள அவர், தனது சொந்த அறக்கட்டளையில் அந்தப் பணத்தை டெபாசிட் செய்துள்ளார். இந்த விவரங்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.
பணியில் இருந்த காலத்திலேயே கிரண்பேடி இப்படி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு கிரண் பேடி பதிலளித்துள்ளார். தான் செய்ததில் தவறில்லை என்று அவர் வாதிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், "எனது நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படையானவை. நான் சிக்கன வகுப்பில் பயணிப்பதையே விரும்புகிறேன். ஆனால் இது தெரிந்தும் எனக்கு உயர்வகுப்பு டிக்கெட் தருகின்றன தன்னார்வ அமைப்புகள். எனவே மிச்சப்பணத்தை சேமித்து எனது என்ஜிஓவில் டெபாஸிட் செய்துள்ளேன்.
இதில் தனிப்பட்ட லாபம் எதுவும் இல்லை. எல்லாமே எனது தலைமையிலான பவுண்டேஷன் மூலம்தான் நடக்கிறது.
இதுதொடர்பான விசாரணையை சந்திக்க நான் தயார். என் மீதான இந்தப் புகாருக்கு அன்னா குழுக்கு விளக்கம் அளித்துள்ளேன். ஹஸாரே இப்போது மவுன விரதம் இருப்பதால், அவரிடம் பின்னர் விளக்கம் கூறுவேன்," என்றார்.
மேலும் தனது சொற்பொழிவுகள் மற்றும் புத்தகங்கள் மூலம் ஏராளமாக தனக்கு பணம் வருவதாகவும், அதை தன்னார்வ தொண்டு அமைப்புக்கே வழங்கிவிடுவதாகவும் அவர் கூறியுள்ளார் (இது அவரது சொந்த அமைப்பு. இவர்தான் அதற்கு தலைவர்!)
"உண்மையிலேயே பணத்தை சேமிக்க முயல்பவராக இருந்தால், தான் சிக்கன வகுப்பில் போக விரும்புவதைச் சொல்லி அதற்கான டிக்கெட்டையே கேட்டுப் பெறலாமே. மீதித் தொகையை இவரது சொற்பொழிவுக்கான மதிப்புத் தொகையாகப் பெற்றிருக்கலாம். ஆனால் உண்மை வேறு. எங்கும் இவர் இலவச சொற்பொழிவு நிகழ்த்துவதில்லை, அதற்கு பெரிய தொகையை அன்பளிப்பாகப் பெறுகிறார். அது போக, டிக்கெட் கட்டணத்தில் மறைமுகமாக லாபம் பார்த்துள்ளார்.
ஆதாரங்களுடன் மாட்டிக் கொண்ட பிறகு, ஆயிரம் காரணங்களைச் சித்தரிப்பது அவர் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது", என அரசியல் விமர்சகர்கள் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளனர்.