அமேதி பொதுக்கூட்டத்தில் துப்பாக்கியுடன் ராகுல் காந்தி அருகே சென்றவர் கைது
அமேதி: உத்தர பிரதேச மாநிலம் அமேதியி்ல் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை நோக்கி துப்பாக்கியுடன் வந்த நபர் கைது செய்யபப்ட்டார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இன்று உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்தவுடன் மேடையைவிட்டு இறங்கியபோது ஒருவர் ராகுலை நோக்கி விரைந்து வந்துள்ளார். ராகுலின் பாதுகாப்பு படையினர் அந்த நபரைத் தடுத்து நிறுத்தி பரிசோதித்ததில் அவரிடம் துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
அந்த நபரின் பெயர் திவாகர் சோனி. அவர் நிலுவையில் இருக்கும் தனது தந்தையின் கொலை வழக்கு குறித்து ராகுலிடம் தெரிவிக்க வந்துள்ளார். அந்த துப்பாக்கிக்கான உரிமம் அவரிடம் உள்ளது. தான் ராகுலை தாக்க வரவில்லை என்று சோனி தெரிவித்தார்.
இன்று காலை அமேதி வந்த ராகுலை ஒரு போராட்டக்குழு தடுத்து நிறுத்தியது. மாநிலத் தேர்தலில் நேர்மையானவர்களை மட்டும் நிறுத்துமாறு அந்த குழு அவரைக் கேட்டுக் கொண்டது. இதனால் சற்றும் அதிர்ச்சி அடையாத ராகுல் அங்குள்ள மக்களிடம் சகஜமாகப் பேசினார். அதன் பிறகு தேர்தலில் சீட்டு கேட்டு ஒரு கூட்டம் ராகுலை சுற்றி வளைத்துக் கொண்டது.
இந்த ஆண்டு இறுத்திக்குள் உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications