'அம்மா'வை வணங்கி ஆசி பெற வந்த 10 மேயர்கள், உள்ளாட்சித் தலைவர்கள்
சென்னை: சென்னை மேயர் சைதை துரைசாமி உள்ளிட்ட 10 மாநகராட்சி மேயர்களும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் ஆசி வாங்க சென்னை வந்துள்ளனர்.
தமிழகத்தி்ல் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடந்தது. சட்டசபை தேர்தலைப் போன்று உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக அதிக இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. 10 மாநகராட்சி மேயர் பதவிகளையும் அதிமுக கைபற்றியது. 125 நகராட்சிகளில் 89 இடங்களிலும், 529 பேரூராட்சிகளில் 287 இடங்களிலும் அதிமுக வெற்றி பெற்றது.
இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் நாளை பதவி ஏற்கவுள்ளனர்.
மேயர்களுக்கு மாநகராட்சி கமிஷனர்களும், நகராட்சி தலைவர்களுக்கு நகராட்சி கமிஷனர்களும், பேரூராட்சி தலைவர்களுக்கு பஞ்சாயத்து நிர்வாக அதிகாரிகளும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கின்றனர்.
இவர்கள் தவிர மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோரும் நாளை பதவி ஏற்கின்றனர்.
நாளை பதவியேற்பு விழா நடக்கவிருக்கையில் சென்னை மேயர் சைதை துரைசாமி உள்ளிட்ட 10 மேயர்கள், அதிமுக நகரசபை தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் இன்று முதல்வர் ஜெயலலிதாவிடம் ஆசி பெறுவதற்காக சென்னை வந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications