ப.சிதம்பரத்தை விசாரிக்க கோரும் சாமியின் மனு-சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு காத்திருக்க சிபிஐ நீதிமன்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரத்தையும் சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த மனுவை ஏற்பதா இல்லையா என்பது குறித்த விசாரணையை வரும் நவம்பர் 8ம் தேதிக்கு டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றம் ஒத்தி வைத்துவிட்டது.
2ஜி ஊழலைத் தடுக்க நிதியமைச்சராக இருந்த இப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தவறிவிட்டதாகவும், இதனால் அவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும், இதனால் அவரையும் குற்றவாளியாக வேண்டும் என்றும் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் சாமி மனு தாக்கல் செய்தார்.
அதே போல ஸ்பெக்ட்ரம் முறைகேடாக விற்கப்படுவதைத் தடுக்கவோ, இந்த விவகாரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் முயற்சிகளுக்கு தடை விதிக்கவோ சிதம்பரம் முயற்சிக்கவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்திலும் சாமி இன்னொரு மனு தாக்கல் செய்தார்.
ஆனால், சிதம்பரத்தை விசாரிப்பதற்கு மத்திய அரசும் சிபிஐயும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந் நிலையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ப.சிதம்பரத்துக்கு எதிராக பிரணாப் முகர்ஜி தலைமையிலான மத்திய நிதியமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு எழுதிய குறிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. (அதில், கடைசி நேரத்தில் ஸ்பெக்ட்ரம் விற்பனையை ரத்து செய்ய அதிகாரம் இருந்தும் கூட அதை சிதம்பரம் செய்யவில்லை. இதனால் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தது என்று கூறப்பட்டிருந்தது.)
இந் நிலையில் சாமியின் மனு இன்று பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே கோரிக்கையை முன் வைத்து உச்ச நீதிமன்றத்தில் சாமி தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பு வெளியாகும் வரை காத்திருக்கப் போவதாக அறிவித்த நீதிபதி, இதில் அடுத்த கட்ட விசாரணையை வரும் நவம்பர் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications