தீபாவளி கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் அடாவடி வசூல்

தீபாவளி பண்டிகை வருகிற 26ம் தேதி தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்கள் புத்தாடை வாங்குவதிலும், இனிப்புகள் செய்வதிலும் மும்முரமாகியுள்ளனர். வழக்கம் போல தென் மாவட்டங்கள் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் வசித்து வருவோர் தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாட ஊர்களுக்குக் கிளம்ப ஆரம்பித்துள்ளனர்.
ஏற்கனவே ரயிலில் புக் செய்து வைத்திருப்போர் அதற்குத் தயாராகி வருகின்றனர். ரயில்களில் இடம் கிடைக்காதோருக்கு ஒரே வழி கோயம்பேடு சென்று பஸ் ஏறிப் போவது மட்டுமே. அங்கும் தற்போது கட்டுக்கடங்காமல் கூட்டம் அலைமோத ஆரம்பித்துள்ளது. காலையிலேயே மக்கள் கூட்டம் கோயம்பேடு பஸ் நிலையத்தில் அலை மோதுகிறது. நினைத்த பஸ் வரும் வரை காத்திருக்காமல் கிடைக்கிற பஸ்சில் ஏறி பலரும் ஊருக்குப் போக ஆரம்பித்துள்ளனர்.
ஆனால், போதுமான அளவில் பஸ்கள் விடப்படவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி போன்ற தொலைதூர தென் மாவட்டங்களுக்கு போதிய அளவில் பஸ்கள் விடப்படவில்லை என்று அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர். தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் அதிக அளவிலான பஸ்களை பகலிலும் இயக்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.
இன்று இரவும், நாளை இரவும் பஸ்களுக்கு பெரும் கூட்டம் அலை மோதும் என்பதால் கோயம்பேடு பஸ் நிலையத்தி்ல போலீஸாரும் போதிய அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
மறுபக்கம் வழக்கம் போல அதிக அளவில் கட்டணம் வசூலித்து பெரும் கொள்ளையில் ஆம்னி பஸ்கள் குதித்துள்ளன. வழக்கமாக வசூலிப்பதை விட இரண்டு மடங்கு அதிக கட்டணம் கேட்டு மக்களை வாட்டி வதைத்து வருகின்றன ஆம்னி பஸ்கள். ஆனால் இதை காவல்துறையினரோ, அதிகாரிகளோ தடுக்காமல் இருப்பதாக மக்கள் குறை கூறுகின்றனர்.
எழும்பூர், கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆம்னி பஸ்களை நோக்கி செல்லும் மக்கள் இந்த அதிக கட்டணத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வேறு வழியில்லாத நிலையில் இருப்பவர்கள் கேட்டதை கொடுத்து அழுது விட்டு போகின்றனர்.
பல்வேறு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 1000 பஸ்கள் வரை தீபாவளிக்காக விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் முன்பதிவு வசதி கிடையாது.
கோயம்பேடு பஸ் நிலையம் வந்து வரிசையில் நின்றுதான் டிக்கெட் எடுத்தாக வேண்டும். ஆனால் இன்று அதிகாலையிலேயே வந்தவர்களுக்கு மட்டுமே கிடைத்தது. மற்றவர்களுக்குக் கிடைக்கவில்லை. பலர் டோக்கன் பெற்றுக் கொண்டு பேருந்து நிலையத்தில் காலையிலிருந்தே காத்துக் கிடக்கின்றனர்.
அதேபோல எழும்பூர் ரயில் நிலையத்திலும் கிடைத்த இடத்தைப் பிடித்து ஊர் போவதற்காக ஆயிரக்கணக்கான பயணிகள் காத்துக் கிடப்பதால் எழும்பூர் ரயில் நிலையத்தில் நிற்கக் கூட இடம் இல்லாத நிலை காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications