துருக்கியை உலுக்கிய 7.3 ரிக்டர் நிலநடுக்கம்- 1000 பேர் பலி
அங்காரா: துருக்கியின் கிழக்குப் பகுதியில், 7.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இதில் சிக்கி நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். போர்க்கால அடிப்படையில் அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன.
சமீப ஆண்டுகளில் துருக்கியைத் தாக்கிய மிகப் பெரிய நிலநடுக்கம் இது என்று கூறப்படுகிரது. குர்து இன மக்கள் அதிகம் வசிக்கும் வான் என்ற பகுதியில் இந்த நிலநடுக்கம் தாக்கியது.
இந்த நிலநடுக்கத்திற்கு 500 முதல் 1000 பேர் வரை உயிரிழந்திருப்பதாக இஸ்தான்புல்லில் உள்ள புவியியல் கழக இயக்குநர் முஸ்தபா எர்டிக் தெரிவித்தார்.
ஆனால் சாவு எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என்று தெரிகிறது. பூகம்பத்தில் சிக்கி அந்த ஊரே உருக்குலைந்து போயுள்ளது. ஏராளமான வீடுகள் இடிந்து சிதறிப் போய் விட்டன. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
பெருமளவிலான பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. பல மாடிக் கட்டடங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவை இடிந்து விட்டன. 7.3 ரிக்டர் அளவிலான பூகம்பத்தைத் தொடர்ந்து 5.6 ரிக்டர் அளவிலான நில அதிர்வும் ஏற்பட்டது.
துருக்கியில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் தாக்குவது இயல்பாகும். கடந்த 1999ம் ஆண்டு ஏற்பட்ட அடுத்தடுத்த 2 நிலநடுக்கங்களில் 20 ஆயிரத்திற்கும மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதேபோல 1976ம் ஆண்டு கால்டிரான் என்ற நகரில் நடந்த நிலநடுக்கத்தில் 3840 பேர் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications