தீபாவளிக்கு அரசு ஊழியர்கள் தொடர் விடுப்பில் சென்றதால் மக்கள் தவிப்பு
சென்னை: தீபாவளிக்கு அரசு ஊழியர்கள் தொடர் விடுமுறையில் சென்றதால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தது. பெரும்பாலான ஊழியர்களின் இருக்கைகள் காலியாக இருந்ததால் மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
அரசு பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்கு வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை நாட்களையொட்டி பண்டிகை நாட்கள் வந்தால், 1 அல்லது 2 நாட்கள் விடுப்பு எடுத்து மொத்தமாக 4 முதல் 5 நாட்கள் வருமாறு அரசு ஊழியர்கள் லீவு எடுத்து கொள்கின்றனர்.
இதனால் அரசு அலுவலக பணிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்தாண்டு தீபாவளி புதன் கிழமை வந்ததால், பெரும்பாலான அரசு அதிகாரிகள் அடுத்து வந்த வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய 2 நாட்களும் விடுப்பு எடுத்து மொத்தம் 5 நாட்கள் விடுமுறையாக மாற்றி லீவு எடுத்து கொண்டனர்.
இதனால் நேற்று மற்றும் நேற்றுமுன்தினம் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன. மாவட்ட ஆணையர் அலுவலகங்கள் முதல் சென்னை தலைமை செயலகம் வரை உள்ள பல அரசு அலுவலகங்களிலும் இதே நிலையை தான் காண முடிந்தது. இதனால் அரசு அலுவலகங்களுக்கு வந்த மக்கள், தங்கள் காரியம் நடக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பண்டிகை நாட்களில் இதுபோல அரசு அலுவலக பணியாளர் மொத்தமாக விடுப்பு எடுத்து செல்வதை தவிர்க்க, அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்படும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications