போலி ஏ.டி.எம்.கார்டு மூலம் உலக வங்கி அதிகாரியின் ரூ.1.5 லட்சம் திருட்டு
சென்னை: சென்னையி்ல் ஏடிஎம் கார்டு கொள்ளை சம்பவங்களில், உலக வங்கி அதிகாரியும் 1,50,000 ரூபாய் பணத்தை இழந்துள்ளார். போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் இதுவரை 3 கோடி ரூபாய்க்கு மேல் தொகை திருடப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளது.
சென்னையி்ல் போலி ஏ.டி.எம்.கார்டுகள் மூலம் பணம் திருடுவது விஸ்வரூபமாகி வருகிறது. நேற்றும் தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் இழந்ததாக 12 பேர் புகார் அளித்துள்ளார். இதில் உலக வங்கி அதிகாரி ஒருவர் 1,50,000 ரூபாயும், தனியார் தொழிற்சாலை அதிகாரி ஒருவர் 1 லட்சம் ரூபாயும் இழந்துள்ளதாக புகார் அளித்திருந்தனர்.
போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் பணம் இழந்ததாக சென்னையி்ல் இதுவரை 150 வங்கி வாடிக்கையாளர் புகார் அளித்துள்ளனர். இதில் சுமார் 3 கோடி ரூபாய் திருடப்பட்டுள்ளதாக தெரிகிறது. போலீஸ் விசாரணையில் தென்சென்னையில் உள்ள 7 ஏடிஎம் மையங்களில் இருந்து வாடிக்கையாளர்களின் ஏடிஎம் கார்டுகளில் இருந்து ரகசிய குறியீடு எண்கள் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த ரகசிய தகவல்களின் மூலம் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் போலி ஏடிஎம் கார்டுகள் தயாரிக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது. போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் பணம் இழந்தவர்களுக்கும் குறிப்பிட்ட வங்கிகளே இழந்த தொகையை திரும்ப தருவதாக கூறியுள்ளன.
போலி ஏடிஎம் கார்டு மூலம் பணத்தை இழந்தவர்கள் புகார் அளிக்குமாறு போலீசார் கேட்டு கொண்டுள்ளனர். சென்னையில் ஏடிஎம் கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்களை திருடும் கும்பலை பிடிக்க, கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங், துணை கமிஷனர் ராதிகா, கூடுதல் துணை கமிஷனர் சுதாகர் ஆகியோர் தலைமையிலான போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏடிஎம் கார்டு கொள்ளையை தடுப்பது குறித்து சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், வங்கி அதிகாரிகளும் போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் வயதானவர்களை ஏடிஎம் சென்டர்களுக்கு காவலுக்கு வைக்கும் நடைமுறையை வங்கிகள் மாற்ற வேண்டும் என போலீஸ் அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.












Click it and Unblock the Notifications