முடிவுக்கு வந்தது அருணாசலபிரதேச கலாட்டா- புதிய முதல்வராக நபம்துகி பதவியேற்றார்
இடாநகர்: அருணாசலபிரதேசத்தின் புதிய முதலமைச்சராக நபம்துகி தேர்வு செய்யப்பட்டு இன்று பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம் கடந்த சிலநாட்களாக அங்கு நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 30-ம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் முதல்வர் டோர்ஜி காண்டு உயிரிழந்தார். இதையடுத்து புதிய முதல்வராக ஜர்போம் காம்லின் மே மாதம் 5-ம் தேதி பொறுப்பேற்றார். அவருக்கு எதிராக அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த நபாம் துகி தலைமையில் போர்க் கொடி உயர்த்தினர்.
ஜர்போம் காம்லின் ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். உட்கட்சி பூசல் வலுத்ததை அடுத்து ஜர்போம் காம்லின் திங்கள்கிழமையன்று முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். ஆளுநரை சந்தித்து அவர் பதவி விலகல் கடிதத்தை கொடுத்தார்.
இதையடுத்து புதிய முதலமைச்சராக நபாம்துகி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் தலைநகர் இடாநகரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். இவர் நியிசி சமூகத்தைச் சேர்ந்தவராவார். இந்த சமூகத்தில் இருந்து நபாம்துகி முதன்முறையாக முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.