குமாரபாளையத்தில் நின்ற லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து: 6 பேர் பலி, 21 பேர் காயம்
குமாரபாளையம்: குமாரபாளையத்தில் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் அதில் பயணித்த 6 பேர் பலியாகினர், 21 பேர் படுகாயமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த வளையகாரனூர், தென்காடு பகுதியி்ல் நேற்று அதிகாலை 4 மணியளவில் சேலத்தில் இருந்து பாலக்காடுக்கு கிளீனிங் பவுடர் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது சேலத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஒன்று 50 பயணிகளுடன் அவ்வழியாக வந்தது.
அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் நின்ற கிளீனிங் பவுடர் லாரியின் பின்புறத்தில் அரசுப் பேருந்து மோதியது. இதில் பேருந்தின் இடதுபுறம் லாரியுடன் சொருகிக் கொண்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் பேருந்தையும், லாரியையும் கிரேன் மூலம் தனித்தனியாக பிரித்தெடுத்தனர்.
இந்த விபத்தில் தர்மபுரி மாவட்டம் தாசம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் மனைவி ஜோதி, ஆத்தூரைச் சேர்ந்த வீராச்சாமி(50), அவரது மனைவி முருகம்மாள்(45), நடத்துநர் ராஜன்(56), சிதம்பரம் சித்தேரியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மகள் சங்கீதா(25) மற்றும் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒரு நபர் என 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த 21 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முதல்வர் இரங்கல்:
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த முதல்வர் ஜெயலலிதா பலியானவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவி்த்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
குமாரபாளையத்தில் நேற்று சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரியின் மீது சேலத்தில் இருந்து கோவையை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில், பேருந்தில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த செய்தியை அறிந்து நான் மிகவும் துயருற்றேன். இந்த விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் இத்துயரச் சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களை நினைத்தும் வருத்தமுற்றேன். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்கள் அனைவரும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளும், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்ட நிர்வாகத்துக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இச்சம்பத்தில் காயமடைந்துள்ள அனைவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரூ.1 லட்சம் உதவி:
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.1 லட்சமும், பலத்த காயமடைந்த அடைந்தவர்களுக்கு தலா ரூ.15,000ம் முதல் அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications