தமிழகத்துக்கு முதல்முறையாக 8 டிஎம்சி கிருஷ்ணா நதி நீர் வழங்கிய ஆந்திரா!

சென்னை நகரின் குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக தமிழக. ஆந்திர, கர்நாடக, மகாராஷ்டிக அரசுகள் இடையே 1977ம் ஆண்டு கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகியவை ஆண்டுதோறும் தலா 5 டிஎம்சி நீரை, மொத்தம் 15 டிஎம்சி நீரை, தமிழகத்துக்குத் தர வேண்டும்.
ஆனால், 1983ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் திருத்தப்பட்டு தமிழகத்துக்கு 12 டிஎம்சி நீரைத் தர வேண்டும் என்று மாற்றப்பட்டது.
கிருஷ்ணா நதி பெரும்பாலும் ஆந்திர மாநிலத்திலேயே ஓடுவதால், தமிழகத்துக்கு நீரைத் தருவது தொடர்பான முக்கிய முடிவை எடுக்கும் நிலையில் ஆந்திராவே உள்ளது.
இதனால் ஜனவரி-ஏப்ரல் மாதங்களில், 4 டிஎம்சி நீரையும், ஜூலை- அக்டோபர் மாதங்களில் 8 டிஎம்சி நீரையும் ஆந்திரா வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது.
கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஸ்ரீசைலம் அணையிலிருந்து திருப்பி விடப்படும் இந்த நீர், சுமார் 406 கி.மீ. தூரம் கால்வாய்கள், குழாய்களில் பயணித்து பென்னார் பள்ளத்தாக்கில் உள்ள சோமசீலா அணைக்கட்டு வழியாக சென்னையின் பூண்டி நீர்த் தேக்கத்தை அடையும்.
இந்த நீர் தமிழகத்தில் நுழையும் இடத்தில் ஊத்துக்கோட்டை அருகே கண்டலேறு அணை உள்ளது. இது தான் 'ஜீரோ பாயிண்டாகும்'. இந்த இடத்திலிருந்து தான் தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் நீரின் சரியான அளவு கணக்கிடப்படும்.
பூண்டிக்கு வரும் நீர் ரெட் ஹில்ஸ், சோழாவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு குழாய்கள் மூலம் பிரித்து அனுப்பப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு சென்னைக்கு குடிநீராக வழங்கப்படுகிறது.
ஒப்பந்தம் 1977ம் ஆண்டிலும் பின்னர் 1983ம் ஆண்டிலும் கையெழுத்தானாலும், கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து முடிந்து சென்னைக்கு முதன்முறையாக 1996ம் ஆண்டிலிருந்து தான் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த 15 ஆண்டுகளில் இதுவரை கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு ஜூலை- அக்டோபர் மாதங்களில் 8 டிஎம்சி நீரை ஆந்திரா வழங்கியதே இல்லை.
ஆனால், இந்த ஆண்டு தான் முதன்முறையாக இந்த காலகட்டத்தில் 8 டிஎம்சி நீர் தரப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 23ம் தேதி முதல், நேற்று வரை பூண்டி நீர்த் தேக்கத்துக்கு 7.9 டிஎம்சி நீர் வந்துள்ளது. இப்போதும் அணைக்கு வினாடிக்கு, 315 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
கடந்த 15 ஆண்டுகளில் ஒப்பந்தப்படி இப்போது தான் சரியான அளவு நீர் வந்துள்ளது. இதற்கு முன் 2009ம் ஆண்டு தான் அதிகபட்சமாக 6.8 டிஎம்சி நீர் வந்தது.
8 டிஎம்சி நீரை தரப்பட்டவுடன் கண்டலேறு அணையை மூடவும் ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.
கிருஷ்ணா நதி நீர் திட்டத்துக்காக அமைக்கப்பட்ட கால்வாய் சேதமடைந்ததால், பல ஆண்டுகளாக இந்த நீரை சென்னைக்குக் கொண்டு வருவதில் சிக்கல் நிலவி வந்தது.
இந் நிலையில் மறைந்த சத்ய சாய் பாபா தான் தனது அறக்கட்டளை மூலம் ரூ. 200 கோடி வரை செலவிட்டு கால்வாயை சீர்செய்து சென்னைக்கு இந்த நீரைக் கொண்டு வர உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊத்துக்கோட்டை 'ஜீரோ பாயிண்ட்' முதல் பூண்டி வரை உள்ள, 25 கி.மீ. கால்வாய் அவரது உதவியால் தான் சீர் செய்யப்பட்டது என்பது மறக்க முடியாதது.












Click it and Unblock the Notifications