ராகுல் காந்தி பெயரில் போலி பேஸ்புக் அக்கௌண்ட்: கல்லூரி மாணவர் கைது
அம்பாலா: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பெயரில் போலியாக பேஸ்புக் அக்கௌண்ட் உருவாக்கி அதில் இருந்து காங்கிரஸ் கட்சியின் பெண் நிர்வாகிகளுக்கு மெசேஜ் அனுப்பிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
மத்திய பிரதேச மாநிலம் நரைன்கார்கைச் சேர்ந்தவர் அன்கித் சைனி(19). அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பெயரில் போலியாக பேஸ்புக்கில் அக்கௌண்ட் திறந்தார். ராகுல் பெயரில் மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் பெண் நிர்வாகிகளுக்கு மெசேஜ் அனுப்பி 'கடலை' போட்டுள்ளார்.
இது ராகுல் அனுப்பும் மெசேஜ்கள் மாதிரி இல்லையே என்று பெண் நிர்வாகிகள் சந்தேகித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதியிடம் தெரிவித்தனர். அவர் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தார்.
சைப்ர கிரைம் பிரிவு மெசேஜ் நரைன்கார்கில் இருந்து வருவதை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் நரைன்கார்க் வந்து அன்கித்தை கைது செய்து விசாரணை நடத்தினர்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் பாபா ராம்தேவ் மற்றும் ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் இருக்க வந்தபோது போலீசார் அவர்களை தாக்கியதால் ஆத்திரமடைந்து இவ்வாறு செய்ததாக அன்கித் தெரிவித்துள்ளார்.
விசாரணைக்குப் பிறகு அன்கித் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் எப்பொழுது அழைத்தாலும் விசாரணைக்கு வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார்.