ஹசாரேவுடன் எங்களுக்கு நீண்டகாலமாக தொடர்பு உண்டு: ஆர்எஸ்எஸ்

அன்னா ஹசாரே ஆர்எஸ்எஸ்சின் முகமூடி என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், இதை ஹசாரேவும் பாஜகவும் மறுத்து வருகின்றன. இந் நிலையில் கொல்கத்தாவில் நிருபர்களிடம் பேசிய மோகன் பகவத்,
ஊழலுக்கு எதிரான தனது இயக்கத்தில் ஆர்எஸ்எஸ்சும் சேர வேண்டும் என்று அன்னா ஹசாரே கோரிக்கை வைத்தால் அதை ஏற்போம். ஆனால், இதுவரை அப்படிப்பட்ட கோரிக்கை ஏதும் அவரிடமிருந்து வரவில்லை. அதே நேரத்தில் அன்னாவின் இயக்கத்தில் சேர ஆர்எஸ்எஸ் தொண்டர்களை நாங்கள் தடுக்கவில்லை.
எங்களுக்கும் ஹசாரேவுக்குமான தொடர்பு நீண்ட காலம் பின்னோக்கியது. கிராமப் புறங்களில் ஹசாரே மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளை வெளியுலகுக்குத் தெரிய வைத்தது ஆர்எஸ்எஸ் தான். எங்களது கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களில் கூட ஹசாரே எங்களுக்கு உதவினார்.
கிராம வளர்ச்சிக்காக இணைந்து செயல்பட்டபோது தான் ஊழலுக்கு எதிராக இயக்கத்தைத் துவக்குமாறு ஹசாரேவுக்கு ஆர்எஸ்எஸ் யோசனை சொன்னது. நான் கடந்த ஜூன் மாதத்தில் ஹசாரேவை சந்திப்பதாகக் கூட இருந்தது. ஆனால், இருவரும் வேறு சில பணிகளில் தீவிரமாக இருந்ததால் சந்திப்பு நடக்கவில்லை.
ஊழலுக்கு எதிரான இயக்கம் தொடங்குவது தொடர்பாக பாபா ராம்தேவிடம் கூட ஆர்எஸ்எஸ் ஆலோசனை நடத்தியது. ஆனால், ஹசாரேவுடன் இணைந்து செயல்படுமாறு ராம்தேவை நாங்கள் வலியுறுத்த முடியாது. அதே நேரத்தில் ஹசாரேவின் இயக்கத்தில் ஒரு பங்கு வகிக்குமாறு ராம்தேவிடம் கோரியுள்ளோம்.
மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுகள் ஆட்சி முடிந்து மக்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது.
திபெத் கொடியையோ அல்லது சுதந்திர திபெத் தொடர்பான போஸ்டர்களையோ காட்ட வேண்டாம் என்று ஒரு சினிமா தயாரிப்பாளருக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால் சீனாவின் கோபத்துக்கு ஆளாவோம் என மத்திய அரசு நினைக்கிறது. இந்திய சினிமாவில் திபெத் கொடியைக் காட்டினால் என்ன தப்பு? என்றார் பகவத்.
பகவத்தும் ஹசாரேவும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications