மக்களிடையே இன்னும் செல்வாக்கைப் பெறாத ராகுல் காந்தி 'பிராண்ட்'!

பல பிராண்ட் தலைவர்களைப் பார்த்த தேசியக் கட்சியான காங்கிரஸில், இன்னும் பிராண்ட் அந்தஸ்து பெறாத தலைவராகவே ராகுல் காந்தி இருப்பதாக வர்த்தக உலகின் ஜாம்பவான்கள் கூறுகின்றனர்.
தெளிவான தலைமைத்துவம், சீரிய சிந்தனை, நம்பகத்தன்மை உள்ளிட்ட பல விஷயங்கள் அரசியலில் ஒருவர் பிராண்ட் ஆக உருவெடுக்க அவசியமாகிறது. அந்த வகையில் இவை அனைத்துமே ராகுல் காந்தியிடம் இன்னும் முதிர்ச்சி பெறாமல் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்திய அரசியலில் விலை போகக் கூடிய ஒரு விஷயமாக ராகுல் காந்தி உருவெடுக்க நெடுந்தொலைவு போக வேண்டும். அவரை தற்போது மக்கள் ஒரு பரீட்சார்த்த விஷயமாகவே பார்த்து வருகின்றனர். முழுமையான நம்பிக்கையை அவர் மீது மக்கள் இன்னும் வைக்கவில்லை என்கிறார் பெங்களூர் ஐஐஎம்மின் பேராசிரியர் மிதிலேஷ்வர்.
அவர் மேலும் கூறுகையில், ஒரு பிராண்ட் என்றால் அது பளிச்சென இருக்க வேண்டும். மிகத் தெளிவானதாக இருக்க வேண்டும். அதை அனைவரும் நம்பும்படியாக இருக்க வேண்டும். உடனே ஏற்றுக் கொள்ளும்படியானதாக இருக்க வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட அடையாளமாக இன்னும் ராகுல் மாறவில்லை.
ராகுல் காந்தி யார், அவரது இலக்கு என்ன, அவரது கொள்கை என்ன, அவரது ஆதரவாளர்கள் யார் என்பது இன்னும் தெளிவானதாக இல்லை. அவர் தொழிலாளிகளுக்குச் சாதகமானவரா அல்லது முதலாளிகளுக்குச் சாதகமானவரா என்பது கூட இன்னும் சரிவரத் தெரியவில்லை.
அவ்வப்போது அவர் எதிர்க்கட்சிகளைத் தாக்கிப் பேசுகிறார். அவரது பேச்சுக்களில் ஸ்திரமில்லை. தொடர்ச்சியான விமர்சனங்களை அவர் செய்வதில்லை. பார்ட் டைம் அரசியல்வாதி போல அவர் செயல்படுகிறார். இதனால் அவர் மீதான நம்பகத்தன்மை மக்களிடம் இல்லை. வியாபாரத்தில் நம்பகத்தன்மை மிகவும் அவசியம்.அப்போதுதான் அந்த பிராண்டுக்கு மதிப்பு கூடும், வியாபாரம் பெருகும் என்றார் அவர்.
மேலும், இந்தியா முழுமைக்குமான ஒரு தலைவராக ராகுல் காந்தி உருவெடுக்கவில்லை. மாறாக இந்தி பேசும் மக்கள் மீது அதிக ஆர்வம் காட்டும் இளம் தலைவராகவே அவர் பார்க்கப்படுகிறார். இது அவரின் ஸ்திரமின்மையை வெளிக்காட்டுகிறது. ஒரு பிராண்ட் என்றால் அத்தனை பேராலும் அது நேசிக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட பிராண்டுக்குத்தான் மார்க்கெட்டில் நல்ல மதிப்பு கிடைக்கும். ஆனால் இந்த நிமிடம் வரை ராகுல் காந்தி ஒட்டுமொத்த இந்தியாவுக்கான ஒரு தலைவராக வளரவில்லை.
மாயாவதி அரசுக்கு எதிராக அவர் தொடர்ந்து பேசி வருகிறார். அதேசமயம், பிற மாநிலப் பிரச்சினைகள் குறித்து அவர் பெரிய அளவில் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. பிற மாநிலப் பிரச்சினைகள் குறித்து அவர் எந்தக் கருத்தை வைத்துள்ளார் என்பதும் தெரியவில்லை என்கிறார் ஐயோகி என்ற அமைப்பின் தலைமை கிரியேட்டிவ் அதிகாரி பிரதாப் சுல்தான்.
அவர் மேலும் கூறுகையில், அன்னா ஹஸாரே டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது அவருடன் ராகுல்காந்தியும் இணைந்திருக்க வேண்டும். அப்படி அவர் செய்திருந்தால் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் அவர்தன் பக்கம் ஈர்த்திருக்க முடியும். அத்தனை இந்தியர்களின் பார்வையும் அவர் மீது படிந்திருக்க முடியும். ஊழலுக்கு எதிரான தலைவராக அவர் பார்க்கப்பட்டிருப்பார். ஆனால் அதைச்செய்ய ராகுல் தவறி விட்டார் என்றார்.
இருப்பினும் ராகுல் காந்திக்கு இன்னும் அவகாசம் உள்ளது, வயது உள்ளது. எனவே அவர் பெரிய பிராண்ட் தலைவராக இன்னும் வாய்ப்பு உள்ளதாக பிரபல விளம்பரப் பட இயக்குநர் பிரகலாத் கக்கர் தெரிவித்துள்ளார்.
சுல்தான் மேலும் கூறுகையில், ராஜீவ் காந்தி, 21வது நூற்றாண்டுக்கு இந்தியாவை அழைத்துச் செல்லும் தலைவராக மக்களால் பார்க்கப்பட்டார். நவீன தலைவராக பார்க்கப்பட்டார் நிதீஷ் குமார். ஒளிவுமறைவற்ற ஒரு தலைவராக கேரள முதல்வர் உம்மன் சண்டி பார்க்கப்படுகிறார். முதலீட்டாளர்களின் பிரியத்துக்குரிய தலைவராக நரேந்திர மோடி பார்க்கப்படுகிறார். ஆனால் ராகுல் காந்தியை எப்படிப் பார்ப்பது என்பது மக்களுக்குப் புரியாமலேயே உள்ளது என்றார்.
பிரகலாத் கக்கர் மேலும் கூறுகையில், எப்போதாவதுதான் பேசுகிறார் ராகுல். அவரை வைத்து கிண்டலடித்து ஒரு விஷயத்தைக் கூட செய்ய முடியாது. காரணம், அவருக்கென்று எந்த ஸ்டைலும் இல்லை. சாதாரண ஜனங்களைப் போலவே அவர் காணப்படுகிறாரே தவிர ஒரு தலைவரைப் போல அவர் இல்லை என்பதே உண்மை என்கிறார்.












Click it and Unblock the Notifications