தோகமலை அருகே பன்றிக்கு வைத்த குறியில் சிக்கிய பெண் மருத்துவமனையில் அனுமதி
தோகைமலை: தோகைமலை அருகே பன்றிக்கு வைத்த குறியில் சிக்கிய பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள ஊத்தாம்பட்டியைச் சேர்ந்த வீரமலை, தங்கராஜ், வீரபத்ரன், கனகராஜ் ஆகியோர் பேரூரில் பன்றி பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பன்றியை கண்ணி வைத்து பிடிக்க முயன்றனர். இதில் பன்றி தப்பி ஓடியதால் அதை துப்பாக்கியால் சுட்டு பிடிக்க முடிவு செய்தனர்.
இதற்காக கருப்பண்ணமேட்டைச் சேர்ந்த ரமேஷ் (32) என்பவரை அழைத்து வந்திருந்தனர்.
அவர்கள் பன்றியை கண்ணி வைத்து பிடித்தபோது, அது அவர்களிடம் இருந்து தப்பி புதருக்குள் ஓடிய போது, பன்றியை நோக்கி ரமேஷ் துப்பாக்கியால் சுட்டார்.
அது குறி தவறி அந்த வழியாக மளிகை கடைக்கு சென்ற பொரக்கிளான்பட்டி விவசாயி சிங்காரம் மனைவி சின்னப்பிள்ளை (59) எனபவர் முகத்தின் மீது குண்டு பாய்ந்தது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். உடனே அவரை மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்த தோகைமலை இன்ஸ்பெக்டர் பிச்சைப்பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணை துப்பாக்கியால் சுட்ட ரமேஷ் மற்றும் அவரை அழைத்து வந்த வீரமலை, தங்கராஜ், வீரபத்ரன், கனகராஜ் ஆகிய 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.