விலைவாசி உயர்வு, தெலுங்கானா குறித்து தொடர் அமளி: இரு அவைகளும் இன்றும் ஒத்திவைப்பு
டெல்லி: விலைவாசி உயர்வு மற்றும் தெலுங்கானா விவகாரங்கள் குறித்து எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் இன்று 2வது நாளாக நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. துவங்கிய முதல் நாளே உபி விவகாரம், 2ஜி ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு போன்ற விவகாரங்களை எழுப்பி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் இன்று 2வது நாள் கூட்டம் துவங்கியது.
லோக்சபாவில் விலைவாசி உயர்வு குறித்து வாக்கெடுப்பில்லா விவாதம் துவங்கியது. இதற்கிடையே அவை துவங்கிய 7வது நிமிடத்திலேயே தெலுங்கானா ஆதரவாளர்கள் தனிதெலுங்கானா கேட்டு அமளியில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து விலைவாசி உயர்வு குறித்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
கருப்பு பணம் மற்றும் விலைவாசி உயர்வு குறித்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை பாஜக அளித்தது. வாக்கெடுப்பு நடத்துமாறு அது வலியுறுத்துகிறது.
பாஜகவும், இடதுசாரிகளும் கூட்டாக சேர்ந்து செயல்படுகின்றன. பாஜக இடதுசாரிகளின் விலைவாசி உயர்வுக்கு எதிரான ஒத்திவைப்பு தீர்மானத்திற்கும், இடதுசாரிகள் கருப்புப் பணத்திற்கு எதிரான பாஜகவின் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கும் ஆதரவளிக்கின்றன.
விலைவாசி உயர்வு குறித்து எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் மீரா குமார் அவையை மதியம் வரை ஒத்திவைத்தார். அவை மீண்டும் கூடியதும் எதிர்கட்சிகள் தெலுங்கானா மற்றும் விலைவாசி உயர்வு குறித்து தொடர் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து அவை இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதே போன்று ராஜ்யசபாவிலும் தெலுங்கானா மற்றும் விலைவாசி உயர்வு குறித்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அந்த அவையும் இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications