ஆள்மாறட்ட அமைச்சர் கல்யாணசுந்தரத்தின் பாஸ்போர்ட்டை முடக்க போலீஸ் முடிவு
சிதம்பரம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஆள் வைத்து எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள புதுச்சேரி அமைச்சர் கல்யாணசுந்தரத்தின் பாஸ்போர்ட்டை முடக்க முடிவு செய்துள்ளதாக வடக்கு மண்டல ஐ.ஜி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கைதிலிருந்து தப்ப கடைசி முயற்சியாக கல்யாணசுந்தரம் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியுள்ளார். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
கல்யாணசுந்தரம் கடந்த செப்டம்பர் மாதம் திண்டிவனத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியபோது ஆள்மாறட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து விழுப்புரம் மாவட்ட குற்றவியல் போலீசார் கல்யாணசுந்தரம் மீது ஜாமீனில் வெளி வர முடியாத வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து கல்யாணசுந்தரம் தலைமறைவானார்
அவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. கல்யாண சுந்தரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம் கடந்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து இடைக்கால தடையின் போது பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்ற கல்யாணசுந்தரம் மீண்டும் தலைமறைவானார்.
உச்சநீதிமன்றத்தில் விசாரணை
கல்யாணசுந்தரத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தியதை அடுத்து முதல் அமைச்சர் ரங்கசாமி அவரை அமைச்சர் பதவியில் நீக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்தார். குடியரசுத்தலைவர் ஆளுநரின் பரிந்துரை கடிதத்தை ஏற்றுக் கொண்டதை அடுத்து அமைச்சர் பதவியை இழந்தார் கல்யாணசுந்தரம்.
இதற்கிடையே கல்யாணசுந்தரம் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
பாஸ்போர்டை முடக்க முடிவு
இந்த நிலையில் தமிழ்நாடு போலீசார் கல்யாணசுந்தரத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது அவரது பாஸ்போர்ட்டை முடக்க நடவடிக்கை எடுத்து வருவதாக வடக்கு மண்டல ஐ.ஜி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
கல்யாணசுந்தரத்தை கைது செய்ய புதுவையில் 3 தனிப்படைகள் தங்கி கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார். தேர்வு எழுத அவருக்கு உடந்தையாக இருந்த ஆசிரியர் ஆதவனையும் தீவிரமாக தேடி வருவதாக கூறிய சைலேந்திரபாபு, விரைவில் கல்யாணசுந்தரம், ஆதவன் அகியோர் கைது செய்யப்படுவார்கள் என்றார்.
திண்டிவனம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கல்யாணசுந்தரம் இன்று ஆஜராகவேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications