பத்திரப் பதிவு செலவு விரைவில் பல மடங்கு உயரும்
நெல்லை: தமிழகத்தில் பத்திரப் பதிவு செலவு விரைவில் பல மடங்கு உயர்த்தப்படவிருக்கிறது.
தமிழகத்தில் ஒவவொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு மறு சீரமைப்பு செய்யப்படும்.
கடைசியாக கடந்த 2007ம் ஆண்டு நில வழிகாட்டி மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது வரைவு நில வழிகாட்டி மதிப்பு பத்திரப் பதிவு துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவு வழிகாட்டி மதிப்பு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. நெல்லையை பொறுத்தவரை வண்ணார்பேட்டையில் ரூ.562 முதல் ரூ.788 வரை இருந்த வழிகாட்டி மதிப்பு புதிய ஜவுளி நிறுவனங்களின் வருகையால் ரூ.2304 முதல் ரூ.3447 வரை உயர்ந்துள்ளது.
நெல்லையப்பர் கோவிலை சுற்றி அமைந்துள்ள நான்கு ரத வீதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.10,765 ஆக இருந்த வழிகாட்டி மதிப்பு தற்போது ரூ. 39,505 ஆக உயர்ந்துள்ளது. வழிகாட்டி மதிப்பு மீதான தங்கள் ஆட்சேபனைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என பத்திர ப்பதிவு துறை அறிவித்தது. இதற்கான காலக்கெடு முடிந்தது.
இது குறித்து பத்திரப் பதிவு அதிகாரிகள் கூறுகையில், நெல்லை சரகத்தை பொறுத்தவரை நெல்லை, பாளையங்கோட்டை, தென்காசி, சேரன்மகாதேவி, தூத்துக்குடி, நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய 7 சரகங்கள் உள்ளன.
இந்த சரகங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட மேல் முறையீடுகள் வந்துள்ளன. இந்த முறையீடுகள் தொடர்பாக விசாரணை நடத்தி திருத்திய வழிகாட்டி மதிப்பு வெளியிடப்படும். அதன் பின்னர் திருத்திய வழிகாட்டி மதிப்பீடு அமுலுக்கு வரும். எப்போது அமுலுக்கு வரும் என்பதை அரசு அறிவிக்கும் என்றனர்.