ரெஸ்ட் எடுக்க 30ம் தேதி கொடநாடு செல்கிறார் ஜெயலலிதா - தற்காலிக அலுவலகம் தயார்!
முதல்வர் ஜெயலலிதா தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த வாரம் 2 நாட்கள் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராகி அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அந்த விசாரணை முடிந்துவிட்ட நிலையில் அவர் ஓய்வு எடுப்பதற்காக வரும் 30 தேதி கொடநாடு செல்கிறார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்வர் ஜெயலலிதா வரும் 30ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு நீலகிரி மாவட்டம் கொடநாட்டுக்கு செல்கிறார். சில வார காலம் அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை மேற்கொள்வார்," என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக உள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள் நிவாரணப் பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் கடும் விலைவாசி உயர்வால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
இந்நிலையில் ஜெயலலிதா ஓய்வுக்காக கொடநாடு கிளம்புவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.