முல்லை பெரியாறு-கேரள அமைச்சர்கள் டெல்லிக்கு படையெடுப்பு-நாடாளுமன்றம் முன் தர்ணா!

அவர்கள் பிரதமர் மற்றும் அனைத்து மத்திய அமைச்சர்களையும் சந்திக்கப் போகிறார்களாம்.
முல்லை பெரியாறு அணை விவகாரம் மீண்டும் பரபரப்பாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் இடுக்கி மாவட்டத்தில் சில இடங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வால் முல்லை பெரியாறு அணைக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு அதன் வழியாக தண்ணீர் அதிக அளவில் கசிய தொடங்கியிருப்பதாகவும் கேரள அரசு கூறி வருகிறது. ஆனால் அணையை பரிசோதித்த தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறியுள்ளனர்.
ஆனாலும் நிலநடுக்கத்தால் அணையின் ஆஸ்திவாரமே ஆட்டம் கண்டு விட்டதாக கேரள நீர்பாசன துறை அமைச்சர் பிஜே ஜோசப் கூறி வருகிறார். அமைச்சரின் இந்த பேச்சால் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ள பகுதிகளான வண்டிபெரியாறு, சப்பாத்து, உப்புதரை, பீருமேடு உள்பட பல பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் கடந்த சில தினங்களாக சாலை மறியல், உண்ணாவிரதம் உள்பட போராட்டங்கள் நடத்து வருகின்றன.
ஜெயலலிதா கொடும்பாவி எரிப்பு
வண்டிப் பெரியாறில் நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. மேலும் இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது. இந்நிலையில் கேரள அமைச்சர்கள் பிஜே ஜோசப், மற்றும் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று டெல்லி செல்கின்றனர்.
இவர்கள் பிரதமர் மன்மோகன்சிங், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால், உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.
அத்தோடு நில்லாமல், அத்தனை மத்திய அமைச்சர்களையும் அவர்கள் சந்தித்து முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு, புது அணை கட்டுவதற்கு ஆதரவு திரட்டப் போகிறார்களாம்.
இந் நிலையில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த பல கட்சி எம்பிக்களும் நாடாளுமன்றம் முன் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications