பாபர் மசூதி இடிப்பு தினம்: 4-6ம் தேதி வரை ரயிலில் பார்சல் அனுப்ப தடை
மதுரை: டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு ரயிலில் பார்சல் அனுப்ப 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,
டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், மூர் மார்க்கெட், தாம்பரம் ரயில் நிலையங்களில் தமிழக ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நவீன கேமராக்கள் மூலம் பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
ரயில் நிலையங்களுக்கு வரக்கூடிய அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டு முக்கிய நுழைவு வாயில் வழியாக மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். பயணிகளின் உடமைகள் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்பட்ட நுழைவு கதவுகள் மூலம் உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.
இந்த கண்காணிப்பு வரும் சனிக்கிழமை முதல் மேலும் தீவிரப்படுத்திப்படும். பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ரயிலில் பார்சல் அனுப்ப 3 நாட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. டிசம்பர் 4ம் தேதி முதல் பார்சல் பதிவு செய்யப்பட மாட்டாது. வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.