பாமாகவில் இருந்து வெளியேறிய ஞானசேகரன் புதிய கட்சி துவக்கம்
சென்னை: பாமகாவில் இருந்து வெளியேறிய ஞானசேகரன் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து புதிய கட்சியை இன்று துவங்கினார். கட்சிக்கு தேசிய அம்பேத்கர் மக்கள் கழகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
பாமகாவில் தொழிற்சங்க செயலாளராக இருந்தவர் ஞானசேகரன். கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ஞானசேகரன் பாமகாவில் இருந்து விலகினார். இந்நிலையில் இன்று சென்னை தி.நகரில் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தேசிய அம்பேத்கர் மக்கள் கழகம் என்ற புதிய கட்சியை துவங்கியுள்ளார்.
கட்சியின் துவக்க விழாவில் தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர், ஜேம்ஸ், சேகர், வெங்கடேசன், மேகநாதன், அரிராம், பிரகலாதன், சொர்ணம், உதயன், ஹெரீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மெருண் மற்றும் நீல நிறத்திலான கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திய பிறகு ஞானசேகரன் கூறியதாவது,
இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பெயரில் புதிய கட்சியை துவக்கி உள்ளோம். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களின் உரிமைக்காகவும் முன்னோற்றத்திற்காகவும் தேசிய அம்பேத்கர் மக்கள் கழகம் பாடுபடும்.
சமுதாயத்தின் அடித்தளத்தில் இருக்கும் மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் சுயமரியாதை கிடைக்க பாடுபடுவோம். எங்கள் கட்சி எந்த கட்சிக்கும் எதிராக செயல்படாது. மக்களுக்கு தொண்டு செய்யும் எண்ணம் கொண்டவர்கள், தூய்மையான அரசியலை விரும்புவோர் எங்கள் கட்சியில் சேரலாம்.
தமிழகம் முழுவதும் இருந்து கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றார்.
இந்த நிலையில் பாமகவில் இருந்த நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ வேல்முருகன் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து வேல்முருகன் கூறியதாவது,
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நவம்பர் 23ம் தேதியில் இருந்து எனக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் தமிழர் விடுதலைப் படையினரின் ஒரு பிரிவு மூலமும், கட்சி முன்விரோதம் காரணமாகவும் எனக்கு ஆபத்து நேரிட வாய்ப்புள்ளது.
மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று நான் போராடி வருவதால் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எனவே எனக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன். அதிமுக அரசு பொறுப்பேற்ற உடன் மக்கள் நலப் பணியாளர்களை நீக்கி உள்ளது. நீக்கப்பட்ட 10,000 மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமீபத்தில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம், பால் விலை உள்ளிட்டவை திரும்பப் பெற வேண்டும். பலத்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும். மதுக்கடைகளில் விற்பனையை அதிகரிக்குமாறு முதல்வர் உத்தரவிட்டு எதிர்கால சமுதாயத்தின் பாதிப்புக்கு வழிவகுத்துள்ளார். சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு கூடாது என்று கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகிறேன்.
அன்னிய முதலீட்டாளர்கள் அளிக்கும் பி.டி. ரக விதைகளை பயிரிடுவதன் மூலம் நம் நாட்டு விவசாயம் பாதிக்கப்படும். அன்னிய நிறுவனங்களை அனுமதித்தால் மக்கள் புரட்சி ஏற்படும் என்றார்.











Click it and Unblock the Notifications