நிலஅபகரிப்பு வழக்கு: உதயநிதி ஸ்டாலினுக்கு நிபந்தனை முன்ஜாமீன்
சென்னை: நில அபகரிப்பு வழக்கில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் மகனும், சினிமா தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு நிபந்தன் முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேஷாத்திரி குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 6 பேர் மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கொலை மிரட்டல், சொத்து அபகரிப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து உதயநிதி முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
6 கிரவுண்டு நிலத்தை அபகரித்து கொண்டதாக என் மீது என்.எஸ்.சேஷாத்திரி குமார் என்பவர் புகார் கொடுத்துள்ளார். இந்த நிலத்தை அபகரித்ததில் சுபாரெட்டி, ராஜாசங்கர், சீனிவாசன் ஆகியோர் மிரட்டல் விடுத்ததாகவும், துணை பதிவாளரை புகார்தாரரின் வீட்டுக்கு அழைத்து வந்து அந்த நிலத்தை வேணுகோபால் ரெட்டி என்பவருக்கு விற்பனை செய்ய வற்புறுத்தியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நில விற்பனை தொடர்பாக என் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் பொய்ப்புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் என்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கும் நில விற்பனைக்கும், எனக்கும் தொடர்பு கிடையாது. நான் நிரபராதி. புகாரில் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும். அதற்கு விதிக்கப்படும் எந்த நிபந்தனையையும் பின்பற்ற தயார் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார். இதே வழக்கில் முன்ஜாமீன் கோரி தியாகராயநகர் திருமூர்த்திநகரைச் சேர்ந்த ராஜாசங்கரும் (53) மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுக்கள் நீதிபதி பழனிவேலு முன்பு விசாரணைக்கு வந்தன. அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஐ.சுப்பிரமணியன் வாதாடுகையில், வழக்கு விசாரணை ஆரம்பகட்டத்தில் இருப்பதால் அவர்கள் சாட்சிகளை கலைத்துவிடுவார்கள். அதனால் அவர்களுக்கு முன்ஜாமீன் கொடுக்கக் கூடாது என்றார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் எஸ்.ராமசாமி, குமரேசன், முனியப்பராஜ், சரவணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது,
இந்த வழக்கில் சாட்சி, ஆதாரங்களை மனுதாரர்கள் கலைத்துவிடுவார்கள் என்று கூற முடியாது. எனவே இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிடுகிறேன்.
ரூ.10,000க்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான 2 நபர் ஜாமீனும் அளித்து அவர்கள் முன்ஜாமீன் பெறலாம். அதன் பிறகு 4 வாரங்களுக்கு சம்பந்தப்பட்ட போலீசில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். பின்னர் தேவைப்படும்போது போலீசார் முன்பு ஆஜராக வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications