தமிழகத்தில் இன்று லேசான மழை பெய்யலாம்: வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு வடக்கிழக்கு பருவ மழை பரவலாக பெய்துள்ளது. இந்த ஆண்டு சில மாவட்டங்களில் வழக்கமான அளவை விட அதிக அளவு மழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னையில் வழக்கமாக 68 செ.மீ. மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு 1 செ.மீ. அதிகமாக 69 செ.மீ. மழை பெய்துள்ளது.
தமிழகம் முழுவதும் வழக்கமாக 43 செ.மீ மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு 5 செ.மீ. கூடுதலாக 48 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் மாலை 5 மணிக்கு துவங்கும் பனிப்பொழிவு காலை 6 மணி வரை நீடிக்கிறது.
இந்த நிலையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது,
தமிழகத்தில் இன்று சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால் 1 செ.மீட்டருக்கு குறைவாகவே மழைப் பெய்யும். அடுத்த வாரம் மழை பெய்யுமா என்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. வானிலையின் நிலவரத்தை பொறுத்தே அடுத்த வாரம் மழை பெய்வது குறித்து கூற முடியும் என்றார்.