முல்லைப் பெரியாறு பிரச்சனை- கேரள அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்க ஞானதேசிகன் கோரிக்கை

இது குறித்து ஈரேட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழகத்தில் காங்கிரஸ் வலுவாக உள்ளது. அதனை மேலும் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். முல்லை பெரியாறு பிரச்சனையில் கேரள அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று செயல்படுத்த வேண்டும்.
கேரள அரசு கூறுவது போல் முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்க முடியாது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது இது போன்ற ஒப்பந்தங்கள் சரியாக இருக்காது. முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் தமிழகத்தின் உரிமை எந்த நிலையிலும் பாதிக்க கூடாது.
இந்த பிரச்சனையில் தமிழக அரசின் நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது. முல்லைப் பெரியாறு பிரச்சனையில் இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு இங்கு வர உள்ளது.
அந்த குழு போராட்ட குழுவினர் உடன் பேசி இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும். கூடங்குளம் அணு மின் நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால் 2,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதன் முலம் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு தீரும், என்றார்.












Click it and Unblock the Notifications