நெல்லை- தென்காசி அகலப் பாதையில் போக்குவரத்து மார்ச் மாதம் துவங்கும் - மதுரை கோட்ட மேலாளர் கோயல்
நெல்லை: நெல்லை-தென்காசி அகலப்பாதையில் மார்ச் மாதம் ரயில் போக்குவரத்துக்கு தயாராகிவிடும் என்று தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் கோயல் தெரிவித்தார்.
மணியாச்சியிலிருந்து தூத்துக்குடி வரை நடைபெறும் மின் மயமாக்கும் பணிகளை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் கோயல் ஆய்வு செய்தார். அதன்பிறகு நெல்லையில் இருந்து திருச்செந்தூர் வரையில் உள்ள ரயில் பாதையை ஆய்வு செய்தார்.
அதன்பிறகு தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் கோயல் கூறியதாவது,
நெல்லை முதல் தென்காசி வரை அகலப்பாதை அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. இங்கு தண்டவளங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துவிட்டது. ஆனால் சில இடங்களில் சிக்னல்கள் அமைக்கும் பணி மட்டும் நடந்து வருகின்றது.
இதனை தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதம் இந்த பாதையில் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், அதிகாரிகள் உள்ளிட்டோரின் ஆய்வு நடைபெற உள்ளது. வரும் மார்ச் மாதம் இந்த வழித்தடம் போக்குவரத்திற்கு தயாராகிவிடும்.
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 2,3 பிளாட்பாரத்தில் கூரை அமைக்கப்படும். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆள் இல்லாத ரயில்வே கிராசிங் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகின்றது. இங்கு அனைத்து பிளாட்பாரங்களையும் இணைக்கும் விதத்தில் புதிய கட்டிடம் அருகே நடைபாதை மேம்பாலம் அமைக்கப்படும்.
முன்னீர்பள்ளத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியில் எங்களது பணி குறைவு. நெடுஞ்சாலை துறையின் பணியே அதிகமாக உள்ளது. திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் விரைவில் ஊழியர்கள் ஓய்வறை கட்டப்படும், என்றார்.











Click it and Unblock the Notifications