கூடங்குளம் முதல் அணு உலை மின் உற்பத்தி விரைவில் தொடங்கும் – ரஷ்யாவில் பிரதமர் உறுதி

விண்வெளி ஆராய்ச்சி, பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு உள்பட 5 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட
ரஷ்யாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவைச் சந்தித்தார். விண்வெளி ஆராய்ச்சி, பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு உள்பட 5 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட இருவரும் பின்னர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலை இன்னும் சில வாரங்களிலும், இரண்டாவது அணுஉலை அடுத்த 6 மாதங்களுக்குள்ளாகவும் செயல்படத் தொடங்கும் என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார்.
கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள 2 நவீன அணுஉலைகளும் தயார் நிலையில் உள்ளன. பாதுகாப்பு, வாழ்வாதாரம் குறித்த அச்சத்தால் அப்பகுதியில் நடைபெறும் போராட்டம் தற்காலிகமானதே. இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண முடியும் என நம்புகிறோம் என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார்.
கூடங்குளத்தில் 3 மற்றும் 4வது அணுஉலைகளை நிறுவுவது குறித்து ஒப்பந்தம் எதுவும் கையெழுத்திடப்படவில்லை. பிரதமரின் அறிவிப்பு, கூடங்குளம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
துக்கநாள் அனுசரிக்கும் மக்கள்
பிரதமரின் ரஷ்ய சுற்றுப்பயணத்தை கூடங்குளம் அணு மின்நிலைய எதிர்ப்பாளர்கள் துக்க நிகழ்ச்சியாக கடைபிடிக்கின்றனர். வெள்ளிக்கிழமை 72 நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ள அவர்கள் தங்களது வீடுகளில் கறுப்புக் கொடிகளை ஏற்றியுள்ளனர். புத்தாண்டில் தங்களது போராட்டத்தை புத்தெழுச்சியுடன் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக கூறியுள்ள போராட்டக்குழுவினர், இது குறித்து இடிந்தகரையில் இன்று கூடி முடிவு செய்யப் போவதாகவும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications