பிரதமர் காரைக்குடி வருகை: டெல்லி அதிகாரிகள் ஆய்வு
காரைக்குடி: வரும் 25, 26 தேதிகளில் பிரதமர் மன்மோகன் சி்ங் காரைக்குடியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதை முன்னிட்டு டெல்லியில் இருந்து வந்துள்ள அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் கட்டடப்பட்டுள்ள ராமானுஜம் உயர் கணித மையப் புதிய கட்டடத்தையும், காரைக்குடி அருகே உள்ள மானகிரியில் கட்டப்பட்டுள்ள 2 தனியார் மருத்துவமனைகளையும் பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைக்கிறார். இதற்காக அவர் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் காரைக்குடியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதையொட்டி பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் பிரிவு டி.ஐ.ஜி. சதுர்வேதி தலைமையில் டெல்லியில் இருந்து பாதுகாப்பு அதிகாரிகள் காரைக்குடி வந்துள்ளனர். அவர்கள் அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் ஆய்வு நடத்தினர். மேலும் பிரதமர் திறந்து வைக்கும் தனியார் மருத்துவமனைகளிலும் ஆய்வு நடத்தினர்.
இது தவிர பிரதமர் செல்லும் வழிகள், அங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளில் யார், யாரெல்லாம் இருக்கிறார்கள் என்ற விவரங்களை கடந்த 2 நாட்களாக சேகரித்து வருகின்றனர்.