சூறாவளி: ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று வீசி வருகிறது. மேலும் நேற்று ராமேஸ்வரத்தில் கன மழை பெய்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
பாக்ஜலசந்தி கடலில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் எனவும், இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல சிரமம் ஏற்படும் என்றும் ராமேஸ்வரம் மீன்துறை அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடலுக்கு செல்ல தயாராக இருந்த ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்களுக்கு மீன்பிடிக்க செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் டோக்கன் வழங்காமல் ராமேஸ்வரம், மண்டபம் மீன்துறை உதவி இயக்குனர்கள் தடை விதித்தனர்.
இதனால் சுமார் 2,000 விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன. சுமார் 10,000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.












Click it and Unblock the Notifications