ஸ்ரீரங்கம் கோவில் சனி்ப்பெயர்ச்சி யாகத்திற்கு பாடிகார்டு புடைசூழ வந்த சசிகலா அண்ணன் மகன்
சனிப்பெயர்ச்சி நடக்க 2 நாட்களுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதா தனது நீண்டகால தோழியான சசிகலாவை அதிமுகவை விட்டும், போயஸ் தோட்டத்தை விட்டும் வெளியேற்றினார். நடிகர் எஸ்.வி.சேகர் கூட சனிப்பெயர்ச்சிக்கு முன்பு சசிபெயர்ச்சி என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஐயர் சுந்தர் பட்டருக்கு சொந்தமான வேணுகோபால் சன்னதியில் நடந்த சனிப்பெயர்ச்சி யாகத்தில் சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் கலந்து கொண்டார். சுந்தர் பட்டர் முதல்வர் ஜெயலலிதாவின் ஆஸ்தான ஐயர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த யாகத்தில் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் கலந்து கொண்டார்.
மகாதேவன் பாதுகாப்புக்காக சஃபாரி உடையணிந்த 10க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் சன்னதியை சுற்றிச் சுற்றி வந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் சசிகலா தம்பி திவாகர் இதே சன்னதிக்கு வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.