கூடங்குளம் விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம்- யுவராஜா
தூத்துக்குடி: கூடங்குளம் விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாக தமிழக இளைஞர் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்கும் வகையில், உதயகுமார் போன்ற பல எதிர்ப்பாளர்கள், பொதுமக்களிடம் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்களைக் கண்டித்தும், அவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு பதிலடி தரும் வகையிலும், கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஜனவரி 2வது வாரம், கூடங்குளத்தில் இருந்து, நெல்லை கலெக்டர் அலுவலகம் வரை பாதயாத்திரை நடத்த முடிவு செய்துள்ளோம்.
இந்த பாதயாத்திரையை தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் துவக்கி வைக்க வலியுறுத்தி உள்ளோம். மேலும் மாவட்ட தலைநகரங்களில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்து உள்ளோம்.
கூடங்குளம் விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடாமல், எதிர்ப்பாளர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, அணுமின் நிலையம் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.