பிறந்த நாளில் பெரும்பாலான நேரத்தை நீதிமன்றத்தில் கழித்த கனிமொழி
டெல்லி: திமுக எம்பி கனிமொழிக்கு நேற்று 44வது பிறந்த நாளாகும். ஆனால், 2ஜி வழக்கு விசாரணை தொடர்பாக நேற்று அவர் தனது பெரும்பாலான நேரத்தை நீதிமன்றத்திலேயே கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ள கனிமொழி, நேற்று இந்த வழக்கு தொடர்பாக டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு காலை 10 மணிக்கு வந்தார். விசாரணை தொடர்ந்ததால் மாலை 4 மணி வரை அங்கேயே இருந்தார்.
மாலையில் வீடு திரும்பிய கனிமொழி தனது கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யாவுடன் பிறந்த நாளைக் கொண்டாடினார்.
முன்னதாக நேற்று காலை அவரது தந்தை மு.கருணாநிதி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். அதே போல கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள், சகோதரர்கள் மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின் ஆகியோரும் கனிமொழிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.
திமுக நாடாளுமன்றக் குழு உறுப்பினர் டி.ஆர். பாலு, திமுக எம்பி ஹெலன் டேவிட்சன் டெல்லியில் கனிமொழியின் வீட்டுக்குக் காலையில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் தொலைபேசி மூலம் கனிமொழியை தொடர்பு கொண்டு வாழ்த்தினார்.
இதே வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கலைஞர் டி.வி. நிர்வாகி சரத்குமார், ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாஹித் உஸ்மான் பல்வா ஆகியோரும் கனிமொழிக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications