தயாநிதி மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏன்?- சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

இது தொடர்பாக பொதுநல வழக்குகளுக்கான மையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் புகார் எழுந்ததால், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பதவியை தயாநிதி மாறன் கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார். அவரிடம் சி.பி.ஐ, அமலாக்கப் பிரிவு ஆகியவை விசாரணை நடத்தின. இருப்பினும் தயாநிதி மாறன், ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை. அவர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை.
கடந்த ஆண்டு அக்டோபர் 9ம் தேதி தயாநிதி மாறன் மீது சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்தது. அதற்கு மறுநாள் அவரது வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ அதிரடிச் சோதனை நடத்தியது. ஆனால், அதன்பிறகு இரண்டு மாதங்களுக்கு மேலான பிறகும் அவர் மீது சி.பி.ஐ. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக எந்தக் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த அளவுக்கு தயாநிதி மாறனை மத்திய அரசு பாதுகாக்கிறது.
ஏர்செல் நிறுவன அதிபர் சிவசங்கரனை தயாநிதி மாறன் நிர்பந்தப்படுத்தி, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் நிறுவனத்தை விற்கச் செய்ததற்கு போதிய ஆதாரம் உள்ளது.
ஏர்செல் நிறுவனம், மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்ட பிறகுதான், அந்த நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் லைசென்சை தயாநிதி மாறன் கொடுத்துள்ளார். இருப்பினும் அவர் மீது எப்ஐஆரை மட்டும் பதிவு செய்த சிபிஐ இன்னும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதாடினார். அவர் கூறுகையில்,
தயாநிதி மாறனை மத்திய அரசு பாதுகாக்கிறது. மேலும் எஸ்ஸார் நிறுவனத்துக்கு எதிரான விசாரணையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலையிட்டு வருகிறார். இவரது தலையீடு மற்றும் சிபிஐ இயக்குனரின் தலையீடு காரணமாகவே எஸ்ஸார் டெலி ஹோல்டிங்ஸ், லூப் டெலிகாம் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படாமலே உள்ளது.
எஸ்ஸார் டெலி ஹோல்டிங்ஸ், லூப் டெலிகாம் ஆகிய இரு நிறுவனங்கள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டுப் பதிவு செய்வதற்கான ஆதாரங்கள் இருப்பதாக சிபிஐ விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருக்கின்றனர். ஆனாலும் அந்த இரு நிறுவனங்கள் மீது சிபிஐ ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யவில்லை. இது முரண்பாடாக உள்ளது.
மத்திய அரசில் செல்வாக்குப் படைத்த சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், இரு நிறுவனங்களுக்கும் வெளிப்படையாகவே நற்சான்று அளித்திருக்கிறார். வழக்கில் தலையீடு இருப்பதற்கு இதுவே ஆதாரம்.
ஆ.ராசாவைப் போலவே தயாநிதி மாறனும் 2ஜி வழக்கில் குற்றம் புரிந்திருக்கிறார். ஆனாலும் தயாநிதி மாறன் மீதான விசாரணையை சிபிஐ வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருகிறது என்றார் பிரசாந்த் பூஷண்.
இதையடுத்து இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 10 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்தகட்ட விசாரணையை 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications