பொட்டு வைத்தவர் விட்டுப் போனார்-30 வயது காதலர் மீது 50 வயது காதலி புகார்!
சென்னை: சென்னையில் உதவி இயக்குநர் ஒருவர் சினிமா பாணியில் பொட்டு வைத்து திருமணம் செய்துகொண்டபின் திடீரென பாராமுகம் காட்டுவதாக 50 வயது காதலி ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை மேற்குமாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி, 50 வயதான இவர் திருமணம் ஆகாமல் இருந்துள்ளார். தினமும் கோவிலுக்கு செல்லும் போது அங்கு வந்த சினிமா துணை இயக்குநர் ஒருவர் பேசிப் பழகியுள்ளார். திருமணம் திடீரென காதலிப்பதாக கூறியுள்ளார்.
அந்த துணை இயக்குநருக்கு 30 வயதுதான் ஆகியுள்ளது. எனவே 20 வயது வித்தியாசம் உள்ளது என்று கூறி காயத்ரி மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத இயக்குநர், திடீரென ஒருநாள் வீட்டிற்கு வந்து தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டி பின்னர் நெற்றியில் குங்குமத்தை வைத்து காயத்ரியை மனைவியாக ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.
பாராமுகம் ஏன்
அதுமுதல் காயத்ரியும், துணை இயக்குநரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் துணை இயக்குநர் தலைமறைவாகிவிட்டார்.
ஒருநாள் கோவிலில் பார்த்து காயத்ரி கேட்டபோது காதல் திருமணம் முறிந்துவிட்டது என்றும், எனது வயதுக்கு ஏற்ற பெண்ணை திருமணம் செய்து வாழப்போகிறேன். இனிமேல் உங்கள் வழியை நீங்கள் பாருங்கள் என்று கூறியுள்ளார்.
முகவரி கூட தெரியாமல் அவரை கணவராக ஏற்றுக்கொண்டு வாழ்ந்ததாக கூறும் காயத்ரி, அந்த துணை இயக்குநரை கண்டுபிடித்து தன்னுடன் சேர்த்துவைக்குமாறு கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டுள்ளார். ஒருவேளை அவர் ஏற்க மறுத்தால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும்’’என்றும் போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
போலீஸ் ஆறுதல்
இந்த புகார் மனு கமிஷனர் அலுவலக அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.உடனடியாக இந்த புகார் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு, குமரன் நகர் போலீசாரை உரிய நடவடிக்கை எடுக்குமாறு கமிஷனர் உத்தரவிட்டார்.
சினிமா பாணி திருமணம்
விசாரணையின் போது நீங்கள் அந்த வாலிபரை முறையாக பதிவு திருமணம் செய்தீர்களா, அதற்கான ஆதாரம் எதுவும் உள்ளதா?' என்று கேள்வி எழுப்பினார்கள். ஆனால் காயத்ரி, அவரை பதிவு திருமணம் செய்யவில்லை என்றும், நெற்றில் வைத்த குங்குமத்தை மங்கலநாணாக மதித்து, அவரை எனது கணவராக ஏற்றுக்கொண்டுவிட்டேன். அவர் சினிமாக்காரர் என்பதால் சினிமா பாணியில் என்னை திருமணம் செய்துவிட்டு, டாடா காட்டிவிட்டு போய்விட்டார் என்றும் கூறி காயத்ரி கதறி அழ ஆரம்பித்தார்.
இதனையடுத்து முகவரி தெரியாத காதல் கணவர் கண்டிப்பாக உங்களுக்கு கிடைப்பார் என்று போலீசார் ஆறுதல் கூறி காயத்திரியை அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications