கரும்பு டன்னுக்கு ரூ 2,100 ஆதாரவிலை... எத்தனால் தயாரிக்கவும் அனுமதி - ஜெயலலிதா அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரும்புக்கான ஆதார விலையை இந்த ஆண்டு ரூ 2,100 ஆக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதில் போக்குவரத்து செலவு ரூ 100-ம் அடங்கும்.

மேலும், கரும்பு விவசாயிகள் பயனடையும் வகையில், கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளில் எத்தனால் உற்பத்தியை தொடங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

"வேளாண் துறையில் நிலவும் தேக்க நிலையை நீக்கும் வகையில், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்குவதிலும், விவசாயிகளின் தனி நபர் வருமானத்தை அதிகரிப்பதிலும், விவசாய பெருங்குடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும், வேளாண் நிலப்பரப்பினை அதிகரிப்பதிலும், உற்பத்தித் திறனை உயர்த்துவதிலும் பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

நான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், உணவு உற்பத்தியை பெருக்கும் வகையில், சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக மேட்டூர் அணையை ஜூன் 6-ஆம் தேதி திறக்க உத்தரவிட்டேன். இது மட்டுமல்லாமல், திருந்திய நெல் சாகுபடித் திட்டத்தின் மூலம் கூடுதலாக 60,000 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், துல்லிய பண்ணையம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றில் உகந்த பயிர் மேலாண்மையைக் கடைபிடித்தல், துல்லிய பண்ணையம் முறைகளில் காய்கறிகளை பயிரிடுதல், தோட்டக்கலை பயிர்களுக்கான அடர் நடவு முறை என பல புதிய முறைகளை நடப்பாண்டில் எனது தலைமையிலான அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

இது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் நுண்ணீர் பாசனம் அமைத்து பயிரிடும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும் வழங்க நான் உத்தரவிட்டேன்.

இதே போன்று, கரும்பு உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில், நீடித்த நவீன கரும்பு உற்பத்தித் திட்டம் என்ற புதிய திட்டத்தினை செயல்படுத்த உத்தரவிட்டு, இதற்கென 12 கோடியே 93 லட்சம் ரூபாயை நான் ஒதுக்கீடு செய்துள்ளேன்.

இந்தப் புதிய திட்டத்தின் மூலம் குறைந்த அளவு விதை நாற்றுகள் மற்றும் குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி, சரியான அளவு ஊட்டச் சத்து மற்றும் பயிர் பராமரிப்பின் மூலம் அதிக மகசூல் பெற முடியும்.

மேலும், பயிர் செய்வதற்கான உற்பத்தி செலவுகள் அதிகரித்துக் கொண்டே செல்வதால், உணவு உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், வேளாண் இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்காக ஒவ்வொரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கும் மானியமாக 20 லட்சம் ரூபாய் வீதம் 400 தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு 80 கோடி ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இதன் மூலம், குறைந்த நிலப் பரப்பில் அதிக அளவு உணவு உற்பத்தி கிடைக்க வழிவகை ஏற்படும்.

வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்காக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக, கடந்த ஆண்டு 57.92 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த அரிசி உற்பத்தி நடப்பாண்டில் 80 லட்சம் டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு 76.6 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த மொத்த உணவு தானிய உற்பத்தி, நடப்பாண்டில் 115 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரும்பைப் பொறுத்த வரையில், கடந்த ஆண்டு 3.1 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட கரும்பு நடப்பாண்டில் 3.5 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த ஆண்டு 342.5 லட்சம் டன்னாக இருந்த கரும்பு உற்பத்தி நடப்பாண்டில் 400 லட்சம் டன்னாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், கரும்புக்கான ஆதார விலை உயர்த்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை மனதில் கொண்டும், முதற்கட்டமாக இந்த ஆண்டு கரும்புக்கான ஆதார விலையை, போக்குவரத்து செலவு 100 ரூபாய் உட்பட 2,100 ஆக உயர்த்த நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எத்தனால் உற்பத்தி...

இதே போன்று, கரும்பு விவசாயிகள் கூடுதல் உற்பத்தி செய்து பொருளாதார பயனடையவும், சர்க்கரை ஆலைகள் போதிய வருவாய் ஈட்டி அதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு அதிக விலை கொடுப்பதற்கு ஏதுவாகவும், எத்தனால் உற்பத்தியை துவங்க எனது தலைமையிலான தமிழக அரசு 2002 ஆம் ஆண்டு கொள்கை அளவில் முடிவு எடுத்தது.

இதன் அடிப்படையில், ஆறு தனியார் எரிசாராய வடிப்பாலைகளும், இரண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் அமைந்துள்ள எரிசாராய வடிப்பாலைகளும் எத்தனால் உற்பத்தியை தொடங்கின. இதன் மூலம், அவை 185 லட்சம் லிட்டர் எத்தனால் தயாரித்து எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்தன. எனினும், 2006 ஆம் ஆண்டு இறுதியில், எத்தனால் உற்பத்திக்கான அனுமதியை முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு நிறுத்தி வைத்தது.

இதனால், எத்தனால் ஆலைகளை அமைத்த சர்க்கரை ஆலைகள் இன்னலுக்கு உள்ளாகியுள்ளன. எத்தனால் உற்பத்தியினால் அதிக லாபம் ஈட்ட முடியும் என்பதால், கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் கரும்பு விலையை வழங்குவது சர்க்கரை ஆலைகளுக்கு எளிதாக இருக்கும். எனவே தான், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் எத்தனால் உற்பத்தி ஊக்குவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளில் எத்தனால் உற்பத்தியை தொடங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம், கரும்பு விவசாயிகள் கூடுதல் விலை பெறவும், சர்க்கரை ஆலைகள் கூடுதல் வருவாய் ஈட்டவும் வழி வகை ஏற்படும். என்னுடைய இந்த இனிய நடவடிக்கைகளின் மூலம் இனிக்கும் கரும்பைத் தரும் விவசாயிகள் இன்புறுவார்கள் என்று நம்புகிறேன்," என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மதுபான தயாரிப்புக்கு எத்தனால்தான் அடிப்படை தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+