புயல் பாதிப்பை மத்திய அரசுக்கு சொல்லித்தான் புரிய வைக்க வேண்டுமா- கருணாநிதி காட்டம்

கடலூர், புதுச்சேரியில் தானே புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட கருணாநிதி நேற்று திருவாரூர் மாவட்டத்திற்குச் சென்றார். பின்னர் கானூர் என்ற இடத்தில் ஏற்பட்ட புயல் மழை பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விவசாயிகளிடமும் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தானே புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் வாழ்வாதாரங்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. புயலுக்கு பின்னர், அதற்கான நடவடிக்கைகளை கொஞ்சம் தாமதமாக தமிழக அரசு எடுத்துள்ளது.
திருவாரூர், நாகையில், நான் எதிர்பார்த்த அளவு பாதிப்பு இல்லை என்றாலும், ஒரு சில ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதற்குரிய நிவாரணத் தொகையை தமிழக அரசு வழங்கவேண்டும்.
பாதிப்புகள் குறித்து மத்திய அரசிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார் கருணாநிதி.
தானே புயல் பாதிப்பு தொடர்பாக மத்திய அரசு எந்த அளவுக்கு மெத்தனமாக உள்ளது என்பதையே கருணாநிதியின் இந்த பேச்சு உணர்த்துவதாக உள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர். புயல் பாதிப்பு மிகப் பெரிய அளவில் உள்ளது அனைவருக்கும் தெரியும். ஆனால் இதுவரை ஒரு மத்திய குழுவைக் கூட மத்திய அரசு அனுப்பி வைக்கவில்லை. தமிழக அரசுடனும் இதுகுறித்துப் பேசவில்லை. இந்த அலட்சியப் போக்கைக் குத்திக் காட்டும் வகையில்தான், மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில்தான் கருணாநிதி மறைமுகமாக பேசியுள்ளார் என்கிறார்கள் அவர்.
கருணாநிதி செய்தியாளர்களிடம் மேலும் பேசுகையில், ஒரு எதிர்க்கட்சியானது இதுபோன்ற சமயங்களில் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.அதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம். அப்படித்தான் நானும் புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டேன். தமிழக அரசு எடுத்து வரும் புயல் நிவாரணப் பணிகளுக்கு திமுக முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்றார்.
சென்னை திரும்பினார்
தானே புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட கருணாநிதி நேற்று தனது நண்பர் தென்னன் படத்திறப்பு விழாவிலும் கலந்து கொண்டார். பின்னர் சென்னைக்கு அவர் திரும்பினார்.












Click it and Unblock the Notifications